Published : 23 Dec 2023 05:26 AM
Last Updated : 23 Dec 2023 05:26 AM

சென்னையிலிருந்து கடத்த முயன்ற ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்: இலங்கை நபர் உட்பட 2 பேர் கைது

சென்னை: சென்னையிலிருந்து இலங்கைக்கு கடத்த, பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்களை தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

சென்னையிலிருந்து இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்த சிலர் திட்டமிட்டிருப்பதாக தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு (சென்னை மண்டலம்) போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அப்பிரிவு இயக்குநர் அரவிந்தன், உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்படி, அப்பிரிவு போலீஸார் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தங்கும் விடுதிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

அப்போது, அங்கு தங்கி இருந்த இலங்கையை சேர்ந்த உதயகுமார் என்பவரை பிடித்துவிசாரித்தனர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவர் தங்கி இருந்தஅறையில் சோதனை செய்தபோது அங்கு 2 கிலோ மெத்தம்பெட்டமைன் வகை போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டி ருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்த போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.

மேலும், அவர் கொடுத்த தகவலின்பேரில் பெரம்பூரைச் சேர்ந்தஅக்பர் அலி என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் மறைத்து வைத்திருந்த 54 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தபோதைப் பொருட்கள் மியான்மரில் இருந்து மணிப்பூரில் உள்ளமோரே வழியாக கடத்தப்பட்டு அங்கிருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் இலங்கைக்கு கடத்தி செல்ல கடத்தல்காரர்கள் திட்டமிட்டுள்ளனர். போலீஸார் துரிதமாக செயல்பட்டு கடத்தல் கும்பலைச் சேர்ந்த இருவரை கைது செய்ததோடு, அவர்கள் பதுக்கி வைத்திருந்த போதைப் பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். இதன் சர்வதேச மதிப்பு ரூ.280 கோடி வரை இருக்கும் என போலீஸார் தெரிவித்தனர். இதுகுறித்து தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x