Last Updated : 08 Nov, 2023 01:16 PM

 

Published : 08 Nov 2023 01:16 PM
Last Updated : 08 Nov 2023 01:16 PM

முதன்மைக் கல்வி அலுவலர் வீட்டிலிருந்து மேலும் ரூ.3 லட்சம் பறிமுதல்

முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.3 லட்சம்

விருதுநகர்: விருதுநகரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வீட்டிலிருந்து கணக்கில் வராத மேலும் ரூ.3 லட்சத்தை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் இன்று அதிகாலை கைப்பற்றினர்.

விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றிவந்த ராமன், சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குநராக திங்கள்கிழமை மாலை இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்குப் பதிலாக திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ஆர்.வளர்மதி விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பணி மாறுதல் பெற்ற விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமனுக்கு செவ்வாய் இரவு அவரது அலுவலகத்தில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. அப்போது, ஆசிரியர் இட மாறுதலுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணம் பெறுவதாக விருதுநகர் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு கூடுதல் எஸ்.பி. ராமச்சந்திரன் தலைமையில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமனிடமிருந்து கணக்கில் வராத ரூ.13 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இரவு சுமார் 11.30 மணி வரை விசாரணை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்.எஸ்.நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று அதிகாலை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். அப்போது, வீட்டிலிருந்த ரூ.3 லட்சத்தை லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அப்போது, கைப்பற்றப்பட்ட தொகை விருதுநகரில் நடைபெற உள்ள புத்தகத் திருவிழாவுக்காக வசூல் செய்து வைத்திருந்ததாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமன் தெரிவித்துள்ளார். ஆனால், இப்பணத்துக்கான கணக்கு மற்றும் காரணம் குறித்து லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x