Published : 20 Oct 2023 11:09 PM
Last Updated : 20 Oct 2023 11:09 PM

கரூர் | போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை

போக்சோவில் கைது செய்யப்பட்ட இளைஞர் வசந்தகுமார்.

கரூர்: கரூரில் போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.3 லட்சம் வழங்கவும் கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம் குப்பத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவர் மகன் வசந்தகுமார் (22). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் 21-ம் தேதி பள்ளிக்கு சென்ற 15 வயதான 10-ம் வகுப்பு படிக்கும் அவரது உறவினர் சிறுமியை க.பரமத்தியில் இருந்து இருசக்கர வாகனத்தில் அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், வெளியே யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதுகுறித்து க.பரமத்தி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி கடந்தாண்டு செப். 19-ம் தேதி புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை கைது செய்தனர்.

கரூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் நீதிபதி ஏ.நசீமாபானு வெள்ளிக்கிழமை (அக்.20) வழங்கிய தீர்ப்பில், சிறுமியை கடத்திய குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.1000 அபராதம் விதித்தார். அபராத தொகை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை. வழிமறித்த குற்றத்திற்காக ஓராண்டு சிறை தண்டனை, கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை ரூ.1,000 அபராதம். அதனை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத்தண்டனை. குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம். அதனை செலுத்தத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிட்டார்.

மேலும், இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக ரூ.3 லட்சம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x