Last Updated : 13 Oct, 2023 05:01 AM

 

Published : 13 Oct 2023 05:01 AM
Last Updated : 13 Oct 2023 05:01 AM

சென்னை அருகே 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை: ஊராட்சி முன்னாள் தலைவர் கொலையில் தொடர்புடையவர்கள்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவர் பார்த்திபன் கொலை வழக்கில் தொடர்புடைய இரு ரவுடிகள், சோழவரம் அருகே போலீஸ்என்கவுன்ட்டரில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.

செங்குன்றம் அருகேயுள்ள மொண்டியம்மன் நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன்(53). பாடியநல்லூர் ஊராட்சி முன்னாள் தலைவரான இவர், அதிமுக ஜெயலலிதா பேரவை திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இணைச் செயலராகவும் பொறுப்பு வகித்தார்.

கடந்த ஆக. 17-ம் தேதி பாடியநல்லூரில் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த பார்த்திபனை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துவிட்டு, தப்பியோடியது. இதுகுறித்து செங்குன்றம் போலீஸார் விசாரித்து, 3 பேரைக் கைது செய்தனர்.

எனினும், முக்கியக் குற்றவாளிகளான, பாடியநல்லூர் சோலையம்மன் நகர் முத்துசரவணன்(35), ஞாயிறு பகுதியைச் சேர்ந்த `சண்டே' சதீஷ்(32) ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். பூந்தமல்லி உதவி காவல் ஆணையர் ஜவஹர்தலைமையிலான தனிப்படை போலீஸார் அவர்களைத் தேடி வந்தனர்.

இந்நிலையில், முத்துசரவணன், சதீஷ் ஆகியோர் சோழவரம் மாரம்பேடு பகுதியில், மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை அருகேயுள்ள பாழடைந்த கட்டிடத்தில் பதுங்கி இருப்பதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.

நேற்று அதிகாலை அந்தக் கட்டிடத்தை தனிப்படை போலீஸார் சுற்றிவளைத்தனர். அப்போது, முத்துசரவணன், சதீஷ் ஆகியோர் இரு துப்பாக்கிகளால் போலீஸாரை நோக்கி சுட்டுள்ளனர். இதில், காவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, லிவி பிரபு,ராஜேஷ் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போலீஸாருக்கு ஆறுதல் கூறிய டிஜிபி சங்கர் ஜிவால், உடன் ஆவடிகாவல் ஆணையர் சங்கர்.

இதையடுத்து, போலீஸார் தற்காப்புக்காக இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் முத்துசரவணன் மார்பிலும், சதீஷ் நெற்றியிலும் குண்டு பாய்ந்தது. பலத்த காயமடைந்த இருவரையும் பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு போலீஸார் கொண்டுசென்றனர். மருத்துவர்கள் அவர்களைப் பரிசோதித்ததில், இருவரும் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

தொடர்ந்து, இருவரது உடல்களையும் பிரேதப் பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பிவைத்தனர். மேலும், காயமடைந்தகாவலர்கள் மூவரும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட முத்துசரவணன், அவரது நெருங்கிய கூட்டாளியான சதீஷ்மீது பல்வேறு கொலை, கொலை முயற்சி, வழிப்பறி, பொதுமக்கள் மற்றும் வணிகர்களை மிரட்டி பணம் பறிப்பது உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தொடர்ந்து, ஆவடி காவல் ஆணையர் சங்கர், இணை ஆணையர் விஜயகுமார், செங்குன்றம் துணை ஆணையர் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். என்கவுன்ட்டர் தொடர்பாக சோழவரம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரித்து வருகின்றனர்.

பொன்னேரி ஜுடீசியல் மாஜிஸ்திரேட் அய்யப்பன், ஸ்டான்லிஅரசு மருத்துவமனையில் முத்துசரவணன், சதீஷ் ஆகியோரது உடல்களைப் பார்வையிட்டதுடன், காயமடைந்த காவலர்களை சந்தித்து விசாரணை மேற்கொண்டார். இன்று பொன்னேரி சார் ஆட்சியர் விசாரணை நடைபெறும், தொடர்ந்து இருவரது உடல் களும் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படும் என்றுபோலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், ரவுடிகள் தாக்குதலில் காயமடைந்த காவலர்களை, ஸ்டான்லி மருத்துவமனையில் டிஜிபி சங்கர் ஜிவால், ஆவடிகாவல் ஆணையர் சங்கர் ஆகியோர் சந்தித்து, ஆறுதல் கூறினர்.

வலைதளங்களில் வைரலாகும் வீடியோ: இதற்கிடையில், என்கவுன்ட்டரில் முத்துசரவணன் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன், அவரது தாய் கதறி அழுதபடி வெளியிட்டிருந்த ஒரு வீடியோவில், "எனது மகன் முத்துசரவணனை போலீஸார் சுட்டுக்கொல்லத் திட்டமிட்டுள்ளனர், எனது மகனைக் காப்பாற்றுங்கள்" என்று கூறியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x