Published : 07 Sep 2023 10:21 AM
Last Updated : 07 Sep 2023 10:21 AM

அதிமுக ஒன்றிய கவுன்சிலர் கொலைக்கு பழிக்குப்பழி: சென்னையில் அமமுக நிர்வாகி கொலை வழக்கில் புதிய தகவல்

சென்னை: சென்னை நொளம்பூரில் வசித்தவர் ஜெகன்(48). இவர் அதே பகுதி ரெட்டிபாளையம் சாலையில் மீன்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்தபோது அங்கு வந்த 6 பேர் கும்பல் ஜெகனை வெட்டியது. இதில், ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து அங்கு வந்த நொளம்பூர் போலீஸார், ஜெகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க, அண்ணா நகர் காவல் மாவட்ட துணை ஆணையர் ரோகித்நாதன் ராஜகோபால், திருமங்கலம் உதவி ஆணையர் வரதராஜன் மேற்பார்வையில் நொளம்பூர் காவல் ஆய்வாளர் மில்லர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

முதல்கட்டமாக ஜெகனின் சொந்த மாவட்டமான திருவாரூருக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர். இந்நிலையில் ஜெகனின் பின்னணி பற்றி தனிப்படை போலீஸார் கூறியது: கொலையான ஜெகன், திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அருகே உள்ள கோவிலூர் சந்நிதி தெருவைச் சேர்ந்தவர். இவருக்கு மனைவியும், 8 வயதில் மகனும் உள்ளனர். அருகே உள்ள மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ் (45). கடந்த 2021-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற ராஜேஷ், அதிமுக தரப்பு சேர்மனை வெற்றிபெற வைப்பதற்காக அதிமுகவில் சேர்ந்துள்ளார். அப்போது அதிமுகவில் இருந்த ஜெகனுக்கும் இவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.

அதற்கு முன்பு 2015-ம் ஆண்டே கோயில் திருவிழாக்களில் பேனர் வைப்பது தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், ஜெகனின் சகோதரரை ராஜேஷ் தரப்பினர் கொலை செய்துள்ளனர். ஆத்திரம் அடைந்த ஜெகன் தரப்பினர், ராஜேஷை கொலை செய்வதற்கு பதில் தவறுதலாக அவரின் சகோதரரை கொலை செய்துள்ளனர்.

இந்நிலையில், 2021 பிப்ரவரியில் ஆலங்காடு கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற ராஜேஷ் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில், அமமுகவில் இணைந்த ஜெகன் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த ஜெகன், எதிர் தரப்பால் தன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில், குடும்பத்துடன் சென்னை வந்து, நொளம்பூரில் மீன் கடை வைத்து வாழ்க்கையை நடத்தி வந்தார். இந்நிலையில்தான் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x