Published : 30 Jul 2023 04:00 AM
Last Updated : 30 Jul 2023 04:00 AM

சென்னையில் ரயிலில் பெண் உயிரிழப்பு சம்பவம்: கைதான இளைஞருக்கு குண்டர் சட்டம்

சென்னை: மின்சார ரயிலில் பெண் பயணியிடம் செல்போனைப் பறிக்க முயன்றபோது, அப்பெண் கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தவழக்கில் தொடர்புடைய இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னை கந்தன்சாவடி, கருணாநிதி சோழன் நகரைச் சேர்ந்தவர் சசிகுமார் மகள் ப்ரீத்தி(22). இவர் கடந்த 2-ம் தேதி மாலை கோட்டூர்புரம் ரயில் நிலையத்தில் இருந்து திருவான்மியூர் செல்ல மின்சார ரயிலில் பயணம் செய்தார். இந்திரா நகர் ரயில் நிலையத்தில் ரயில் புறப்பட்டபோது, படியில் நின்று கொண்டிருந்த ப்ரீத்தியிடம் இருந்த செல்போனை 2 பேர் பறிக்க முயன்றனர்.

அப்போது, ப்ரீத்தி நிலை தடுமாறி நடைமேடையில் விழுந்து, தலையில் பலத்த காயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 8-ம் தேதி உயிரிழந்தார். இது குறித்து திருவான்மியூர் ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து, பட்டினப்பாக்கம் சீனிவாசபுரத்தைச் சேர்ந்த விக்னேஷ்(27), மணிமாறன் (19) ஆகியோரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், குற்றவாளி விக்னேஷை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க காவல் ஆணையர் ஆணையிட்டார். இதையடுத்து, அவர் புழல் சிறையில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x