Published : 01 Jul 2022 04:58 AM
Last Updated : 01 Jul 2022 04:58 AM

தமிழகத்தில் 136 நாட்களுக்குப் பிறகு 2 ஆயிரத்தை கடந்த கரோனா தொற்று - பள்ளிகளில் கட்டுப்பாடு

சென்னை: தமிழகத்தில் 136 நாட்களுக்குப் பிறகு கரோனா பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 1,122 ஆண்கள், 947 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 69 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 4 பேருக்கும், 12 வயதுக்குட்பட்ட 93 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 309 முதியோர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 909 பேரும், செங்கல்பட்டில் 352 பேரும், திருவள்ளூரில் 100 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், தமிழகத்தில் தினசரி கரோனா பாதிப்பு விகிதம் 7 சதவீதமாக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1,008 பேர் பூரணமாக குணமடைந்து நேற்று வீடு திரும்பி உள்ளனர். தற்போது சிகிச்சையில் 11 ஆயிரத்து 94 பேர் உள்ளனர். மேலும், நேற்று உயிரிழப்பு எதுவுமில்லை.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருவது குறித்து மருத்துவர்கள் கூறும்போது, ‘‘பெரும்பாலானோர் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித் திரிகின்றனர். இதன் காரணமாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது’’ என்றனர்.

பள்ளிகளில் கட்டுப்பாடுகள்

இந்நிலையில், பள்ளி வளாகங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் முகக்கவசம் அணிதல், தனி நபர் இடைவெளியை பின்பற்றுதல், பள்ளிக்கு வரும்போது உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல் என்பன போன்ற கட்டுப்பாடுகள் மீண்டும் அமல்படுத்தப்படுவதாக பள்ளிக் கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x