Published : 21 Jun 2022 06:28 PM
Last Updated : 21 Jun 2022 06:28 PM

700-ஐ கடந்த பாதிப்பு | தமிழகத்தில் புதிதாக 737 பேருக்கு கரோனா; சென்னையில் மிக அதிகம்

சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 397, பெண்கள் 340 என மொத்தம் 737 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 383 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 62,297 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 34 லட்சத்து 19,905 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 322 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 4,366 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 686 ஆகவும், சென்னையில் 294 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில தினங்களுடன் ஒப்பிடும்போது, தமிழகத்தில் கரோனா பாதிப்பு இன்று வெகுவாக அதிகரித்துள்ளது.

முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 9,923 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. 79,313 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முன்னதாக சென்னை மாநகராட்சி ஆணையர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் புதிதாக 306 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி 1,697 பேர் மருத்துவமனைகள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் பொதுமக்கள் கரோனா தொற்றிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் சளி போன்ற கரோனா தொடர்பான அறிகுறி உள்ள நபர்கள் குறித்த விவரங்களை தெரியப்படுத்த தனியார் மருத்துவமனைகளுக்கு ஏற்கெனவே கடிதம் வாயிலாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது 448 தனியார் மருத்துவமனைகள் மற்றும் பொது சிகிச்சை மையங்கள் சார்பில் விவரங்கள் பெறப்பட்டு வருகின்றன.

19-ம் தேதி தனியார் மருத்துவமனைகளில் இருந்து காய்ச்சல் போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சை பெற்ற 227 பேரின் விவரம் பெறப்பட்டுள்ளது. இவற்றில் ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகர் மண்டலங்களில் தனியார் மருத்துவமனைகளில் இருந்து மிகக் குறைந்த அளவிலான எண்ணிக்கையில் விவரங்கள் பெறப்படுகின்றன.

இந்த மண்டலங்களைச் சார்ந்த பூச்சியில் வல்லுநர்கள் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு செய்து விவரங்களைப் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x