Published : 13 Mar 2020 12:11 PM
Last Updated : 13 Mar 2020 12:11 PM

அனைத்து மலையேற்றப் பயணங்களுக்கும் தடை: நேபாளம்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மலையேற்றப் பயணங்களுக்கும் நேபாளம் தடை விதித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சுமார் 119 நாடுகளில் 1 லட்சத்து 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கோவிட் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுமார் 66 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கோவிட் -19 காய்ச்சலில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனா தொற்றால் ஏராளமான மக்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதால், உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு விதிமுறைகளை விதித்து வருகின்றன.

இதுதொடர்பாக கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் யோகேஷ் பட்டாரை வெள்ளிக்கிழமை அன்று கூறும்போது, ''கரோனா வைரஸ் பெரும் வேகத்தில் பல்வேறு நாடுகளுக்குப் பரவி வருகிறது. இவற்றின் தாக்கத்தைக் குறைக்க நாட்டில் உள்ள அனைத்து மலைச் சிகரங்களிலும் ஏறத் தடை விதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா விசாக்களை அளிப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது.

வசந்த கால மலையேற்றத்துக்கான தடை குறிப்பிட்ட காலத்துக்கு மட்டுமே இருக்கும். இனி வரும் காலங்களில் உலகளாவிய சூழலைக் கருத்தில் கொண்டு தடை விலக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

எவெரெஸ்ட் மலைச்சிகரத்தில் பயணம் மேற்கொள்வதை அனுமதிப்பதன் மூலம் மட்டுமே நேபாளம் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாயை ஈட்டி வருகிறது.

நேபாளத்தில் இதுவரை ஒரே ஒருவர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x