

தணிக்கை பிரச்சினை முடிவுக்கு வந்திருப்பதால், ஜூலை 23-ம் தேதி ‘ஜனநாயகன்’ வெளியீடு இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விஜய் நடிப்பில் உருவான கடைசி படமான ‘ஜனநாயகன்’, தணிக்கை பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. நீண்ட மாதங்களாக இப்பிரச்சினை முடிவுக்கு வராமல், நீதிமன்றத்தை நாடியது படக்குழு. அங்கும் எந்தவொரு முடிவும் எட்டப்படவில்லை என்பதால், அமைதியாக காத்திருந்தார்கள்.
தற்போது ‘ஜனநாயகன்’ படத்தை இறுதியாக பார்த்த தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள். மேலும், சில காட்சிகளையும் நீக்கச் சொல்லியிருக்கிறார்கள். தற்போது நீக்கப்பட்ட காட்சிகளுக்கான உத்தரவாதத்தை தணிக்கை குழுவிடம் படக்குழு அளிக்க வேண்டும். அது முடிவு பெறும் பட்சத்தில், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படும். இவை அனைத்துமே இன்னும் ஓரிரு நாட்களில் முடிந்துவிடும்.
பின்பு தமிழ் தணிக்கை சான்றிதழை வைத்து, இதர மொழி தணிக்கைக்கு விண்ணப்பிக்க முடிவு செய்துள்ளது படக்குழு. இவை அனைத்துமே இன்னும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும். அதன் பிறகு புதிய ட்ரெய்லர் ஒன்றை வெளியிட்டு, படத்தினை விளம்பரப்படுத்த முடிவு செய்திருக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து ஜூலை 23 அல்லது ஜூலை 30 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் ‘ஜனநாயகன்’ வெளியாகும் என்று விநியோகஸ்தர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.