Published : 05 Oct 2016 07:50 PM
Last Updated : 05 Oct 2016 07:50 PM
ரஜினிக்கு உடல்நிலை சீராகி திரும்பியுள்ள நிலையில், '2.0'-ல் அவர் சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளின் படப்பிடிப்பைத் தொடங்கினார் இயக்குநர் ஷங்கர்.
ரஜினி, அக்ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிக்க ஷங்கர் இயக்கி வரும் படம் '2.0'. லைக்கா நிறுவனம் சுமார் 300 கோடி அடங்கிய பெரும் பொருட்செலவில் இப்படத்தை உருவாக்கி வருகிறது.
இப்படத்தின் படப்பிடிப்புக்கு இடையே ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. அதனைத் தொடர்ந்து ரஜினி இல்லாமல் படமாக்கக்கூடிய காட்சிகளின் படப்பிடிப்பை சென்னையில் நடத்தி வந்தார் ஷங்கர்.
அமெரிக்காவில் இருந்து ரஜினி திரும்பியவுடன், ஷங்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தன்னுடைய காட்சிகள் இன்னும் எவ்வளவு இருக்கிறது உள்ளிட்ட விஷயங்கள் அனைத்தையும் கேட்டறிந்துக் கொண்டார். தயாரிப்பு நிறுவனமும் படப்பிடிப்பு சம்பந்தமான பணிகளைத் தொடங்கியது.
ரஜினி, ஏமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளோடு சில முக்கியமான க்ளைமாக்ஸ் காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இயக்குநர் ஷங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "மூன்றில் இரண்டு பங்கு படப்பிடிப்பை 150 நாட்களில் முடித்திருக்கிறேன்" என்று தெரிவித்து ரஜினியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.
நவம்பர் மாதம் '2.0' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிவு பெறுவதை ஒட்டி, படத்தின் வெளியீட்டு தேதி முடிவு செய்யப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT