அக்‌ஷய் குமாருக்குப் புகழாரம் சூட்டிய லாரன்ஸ்

அக்‌ஷய் குமாருக்குப் புகழாரம் சூட்டிய லாரன்ஸ்
Updated on
1 min read

'லட்சுமி பாம்' படத்துக்காக அக்‌ஷய் குமாரின் உழைப்பைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் லாரன்ஸ்.

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் ‘காஞ்சனா’. ‘முனி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இந்தப் படம், 2011-ம் ஆண்டு வெளியானது. ராகவா லாரன்ஸ் ஜோடியாக ராய் லட்சுமியும், திருநங்கை கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடித்திருந்தனர்.

கோவை சரளா, ஸ்ரீமன், தேவதர்ஷினி, தேவன், மனோபாலா, மயில்சாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்தே, 2-ம் பாகம், 3-ம் பாகம் என தமிழில் இயக்கினார் லாரன்ஸ். மேலும், கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் 'காஞ்சனா' ரீமேக் தொடங்கி நடைபெற்று வருகிறது. லாரன்ஸ் இயக்கி வரும் இப்படத்துக்கு 'லட்சுமி பாம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் அக்‌ஷய் குமார் நாயகனாகவும், கியாரா அத்வானி நாயகியாகவும் நடித்து வருகிறார்கள். சரத்குமார் கதாபாத்திரத்தில் யார் நடித்து வருகிறார்கள் என்பதைப் படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை.

தற்போது மும்முரமாகப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனிடையே 'லட்சுமி பாம்' படத்துக்காக அக்‌ஷய் குமாரின் உழைப்பைப் பாராட்டியுள்ளார் இயக்குநர் லாரன்ஸ். இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில், " 'லட்சுமி பாம்' பாடல் படப்பிடிப்பில் இருக்கிறேன். மிகுந்த கடின உழைப்பாளியும், நேரம் தவறாதவரும், பணிவும் கொண்ட எல்லாவற்றுக்கும் மேலாக நல்ல மனிதரான அக்‌ஷய் குமாருடன் பணிபுரிவதில் மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் உள்ளது" என்று தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

'லட்சுமி பாம்' படப்பிடிப்பு முடிந்தவுடன், மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், முதல் பிரதி அடிப்படையில் படத்தை இயக்கவுள்ளார் லாரன்ஸ்.

தவறவிடாதீர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in