Published : 10 Feb 2020 06:48 PM
Last Updated : 10 Feb 2020 06:48 PM

பிரபு சாலமனின் 'காடன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா நடித்துள்ள 'காடன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடன், வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

'பாகுபலி' படத்தின் 2-ம் பாகங்களுக்கான பணிகளை முடித்துவிட்டு, பிரபு சாலமன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் ராணா. ஈராஸ் நிறுவனம் தயாரித்து வந்த இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுக்க உள்ள காடு சார்ந்த பகுதிகளில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ளது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. புல்கிட் சாம்ராட், சோயா ஹுசைன், விஷ்ணு விஷால், அஸ்வின் ராஜா, டின்னு ஆனந்த் உள்ளிட்ட பலர் ராணாவுடன் நடித்துள்ளனர். மூன்று மொழிகளிலுமே நாயகனாக ராணாவும் உடன் நடித்திருப்பவர்கள் வெவ்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு முழுமையாக முடிந்து, கிராபிக்ஸ் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தன. தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடன் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. ஏப்ரல் 2-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஏ.ஆர்.அசோக் குமார், இசையமைப்பாளராக சாந்தனு மொய்த்ரா, ஒலி வடிவமைப்பாளராக ரசூல் பூக்குட்டி மற்றும் எடிட்டராக புவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நீண்ட நாட்களாகப் படத்தில் நடிக்காமல் இருந்தார் ராணா. தற்போது அவர் நடித்துள்ள படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பால் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

தவறவிடாதீர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x