Last Updated : 01 Aug, 2017 03:26 PM

 

Published : 01 Aug 2017 03:26 PM
Last Updated : 01 Aug 2017 03:26 PM

தரமணி மூலம் நாயகனாக அறிமுகம்: வசந்த் ரவி மகிழ்ச்சி

தமிழ்த் திரையுலகில் 'தரமணி' மூலம் நாயகனாக அறிமுகமாக இருப்பது குறித்து வசந்த் ரவி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

ராம் இயக்கத்தில் வசந்த் ரவி. அஞ்சலி மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியிருக்கும் 'தரமணி' ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகவுள்ளார் வசந்த் ரவி.

தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகவுள்ள வசந்த் ரவி, 'தரமணி' குறித்து கூறியிருப்பதாவது:

என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் 'தரமணி'. இயக்குநர் ராம் எனக்கு பல வருடங்களாக பழக்கம். 'தரமணி' படக்கதையை கூறி இக்கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என அவர் கூறியபொழுது மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த கதாபாத்திரத்திற்கு எந்த மாதிரியான பயிற்சிகள் எடுக்க வேண்டும் என கேட்டேன். அதற்கு எந்தப் பயிற்சியும் இல்லாமல் திறந்த புத்தகம் போல படப்பிடிப்புக்கு வந்தால் போதும் என்றார். இப்படத்தின் மூலம் சினிமா பற்றியும் நடிப்பு பற்றியும் அவர் நிறைய கற்றுக்கொடுத்தார்.

ஒரு கால் சென்டர் ஊழியராக 'தரமணி'யில் நடித்துள்ளேன். ஆண்ட்ரியாவுடன் பணி புரிந்தது ஒரு நல்ல அனுபவம். அவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்துள்ளார். இப்படத்தின் டீசர்கள் மாபெரும் வெற்றி பெற்றதிற்கு அதில் வரும் வசனங்களுடன் ரசிகர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள முடிவதனால் மட்டுமே காரணம். படம் முழுக்கவே இவ்வாறான காட்சிகளும் வசனங்களும் இருக்கும்.

'தரமணி' படத்தின் கதாநாயகனாக நடித்ததில், இயக்குனர் ராம் மூலம் தமிழ் சினிமாவில் கால் எடுத்து வைப்பதாலும் பெரும் மகிழ்ச்சி. ஆகஸ்ட் 11-ம் தேதிக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்

இவ்வாறு வசந்த் ரவி தெரிவித்துள்ளார்.

'தரமணி' படத்துக்கு யுவன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள படத்துக்கு, ஸ்ரீகர் பிரசாத் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். ஜே.எஸ்.சதீஷ்குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீஸர் சமூகவலைத்தளத்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x