Published : 01 Aug 2017 08:34 PM
Last Updated : 01 Aug 2017 08:34 PM
ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
தமிழ் திரையுலகில் பெப்சி தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தால், 'காலா' உள்ளிட்ட பல படங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்கள்.
இது குறித்து பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
''வேலை நிறுத்தத்துக்கு காரணம் பெப்சி அமைப்பு அல்ல. இப்போதும் தயாரிப்பாளர்களுக்கு அனைத்து விதமான ஒத்துழைப்பையும் அளிக்க தயாராக உள்ளோம். ஆனால் எங்களின் கோரிக்கைகளை ஏற்று நல்ல முடிவை அறிவிக்கும் எண்ணத்தில் இல்லாமலேயே தயாரிப்பாளர் சங்கத்தினர் இருக்கிறார்கள். அதனால் இன்று வேலை நிறுத்தத்தை தொடங்கியுள்ளோம்.
இந்த வேலை நிறுத்தத்தால் 10 ஆயிரத்துக்கும் மேலான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் ‘காலா’ படப்பிடிப்பு தொடங்கி பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடக்கவில்லை. இந்தப் பிரச்சினைக்கு நாங்கள் காரணமல்ல. தயாரிப்பாளர்கள் இப்போதும் இரு அமைப்புக்கும் இடையே ஒரு குழு அமைத்து பேச்சுவார்த்தைக்கு வருவார்கள் என்றே நினைக்கிறோம்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சிலர் உணர்ச்சிவசப்பட்டு மட்டுமே பேசுகிறார்கள். அது தீர்வாக இருக்காது. தொழிலாளர்கள் பிரச்சினையில் கடந்த கால வரலாற்றை பார்த்து சரியான முடிவு எடுக்க வேண்டும்.
பெப்சி அமைப்பினருடன் வேலை செய்ய மாட்டோம் என்ற தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முடிவை திரும்பப் பெற வேண்டும். ஒப்புக்கொண்ட சம்பளத்தை குறைக்கக் கூடாது. பொது விதிகளை மதிக்க வேண்டும் என்கிற இந்த மூன்று கோரிக்கைகளை வைத்தோம். இவற்றை ஏற்க வேண்டும்.
ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முன்வர வேண்டும். மேற்கொண்ட கோரிக்கைகளை அரசிடமும் முன் வைக்க உள்ளோம்'' என்று ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT