Published : 23 Feb 2017 04:48 PM
Last Updated : 23 Feb 2017 04:48 PM

அதிமுக அரசுக்கு கமல் சூசக எச்சரிக்கை

'கைது செய்யப்பட்ட இயக்கப் பொறுப்பாளர் நலமாக உள்ளார். இதற்கான நாடக ஆசிரியர் மனம் மாறினால் நலம்' என்று ஆளும் அதிமுகவுக்கு நடிகர் கமல் சூசகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக அரசியலில் நிலவி வரும் சூழல் குறித்து உடனடியாக கருத்துகளைத் தெரிவித்து வருபவர் கமல். இதற்கு சமூகவலை தளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.

மேலும், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அதிமுக கட்சியினரை கடுமையாக சாடினார். இது தொடர்பாக, கமல் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

முன்னதாக, கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் "இனி மக்கள் நீதி நாடுகாக்கும். நான் கீச்சிடாமல் அடிநாதத்துடன் அடக்கி வாசிக்கவே நினைத்தேன். ஆனால் எம் இயக்கப் பொறுப்பாளரின் கைது பேசவைக்கிறது.

தமிழக ஜல்லிகட்டுப் போராட்டத்தில் எமதியக்கத்தின் சுதாகரும் சிலரும் நேற்று கைது செய்யப்பட்டனர். இது எமது பெருமையைக் கூட்டவும் அரசியல் வன்மத்தைக் காட்டவும் செய்கிறது'' என்று கமல் கூறினார்.

இந்நிலையில் சிறையில் சுதாகர் நலமாக உள்ளதாக கமல் தெரிவித்தார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், ''சிறையில் சுதாகர் நலமாக உள்ளார் . விடுவிக்கும் முயற்சியில் நமதியக்கத்தார் உறவினருடன் நானும் பேசினேன். இந்நாடக ஆசிரியரே மனம் மாறினால் நலம்

அது புரிந்தவர்க்கான செய்தி. புரியாதோர் விலகி நின்று வேடிக்கை பாரும். வேலை முடிந்தபின் போற்றலாம் அல்லது புரிதலின்றித் வழக்கம்போல் தூற்றலாம்'' என்று கமல் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x