Published : 30 Mar 2017 03:08 PM
Last Updated : 30 Mar 2017 03:08 PM
கடந்தாண்டே நடிகர் சங்க கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா முடிந்துவிட்டது என்று ஜே.கே.ரித்திஷ் குற்றச்சாட்டினார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் ஏப்ரல் 2ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு அணி, விஷால் தலைமையில் ஒரு அணி, கேயார் தலைமையில் ஒரு அணி என 3 அணிகள் போட்டியிடுகின்றன.
தனியாக தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட தயாரிப்பாளர் டி.சிவா விலகி, ராதாகிருஷ்ணன் தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்தார். அவரைத் தொடர்ந்து தனியாக தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கலைப்புலி ஜி.சேகரனும் விலகி ராதாகிருஷ்ணன் தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால் தயாரிப்பாளர் தேர்தலில் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
கலைப்புலி ஜி.சேகரன் ஆதரவு தொடர்பாக ராதாகிருஷ்ணன் தலைமையிலான அணி பத்திரிகையாளர்களை சந்தித்தது. இதில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் போட்டியிடுவதை கடுமையாக விமர்சித்தார்கள். "தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு நடிகராக இருந்து கொண்டு அவரால் எப்படி 24 மணி நேரமும் செயல்பட முடியும்" என கேள்வி எழுப்பினார்கள்.
மேலும் 'சமர்' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் விஷால் செய்த பிரச்சினைக் குறித்து, அப்படத் தயாரிப்பாளரும் தொலைபேசி வாயிலாக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அவருடைய பேச்சைத் தொடர்ந்து தாணு, "இப்படியிருக்கும் விஷால் எப்படி தயாரிப்பாளர்களை காப்பாற்றுவார்" என்று பேசினார்.
இச்சந்திப்பில் பேசிய ஜே.கே.ரித்தீஷ், "கடந்த வருடம் என்னுடைய பிறந்த நாள் மற்றும் நடிகர் சங்கத் தலைவர் நாசர் பிறந்த நாளான மார்ச் மாதம் 5ம் தேதியே, அடிக்கல் நாட்ட வேண்டும் என்று முடிவு செய்து அன்றே பூஜை செய்து குழி தோண்டி செங்கல்லை புதைத்தோம். யாரை ஏமாற்றுவதற்காக மீண்டும் ஒரு அடிக்கல் நாட்டு விழாவை செய்கிறார்கள் என்று தெரியவில்லை" என்று பேசினார்.
விஷால் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் ஆதாரத்தை, ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப் போவதாகவும் ராதாகிருஷ்ணன் தரப்பினர் தெரிவித்தார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT