Published : 14 Sep 2018 04:30 PM
Last Updated : 14 Sep 2018 04:30 PM

தயாரிப்பாளர்கள் குறித்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சர்ச்சைக்குரிய ட்வீட்

தயாரிப்பாளர்கள் குறித்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் சர்ச்சைக்குரிய ட்வீட்டைப் பதிவு செய்துள்ளார்.

‘தளபதி’, ‘இருவர்’, ‘துப்பாக்கி’, ‘செக்கச்சிவந்த வானம்’ உள்ளிட்ட பல படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணிபுரிந்தவர் சந்தோஷ் சிவன். முன்னணி ஒளிப்பதிவாளரான இவர், படங்களையும் இயக்கியிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் பணியாற்றியுள்ளார்.

தயாரிப்பாளர்கள், தங்கள் படங்களில் பணிபுரிந்தவர்களுக்கு சம்பளம் கொடுப்பது தொடர்பான ட்வீட் ஒன்றை, புகைப்பட வடிவில் நேற்று அவர் ட்விட்டரில் பகிர்ந்தார்.

கோபமான முகபாவனை கொண்ட நாய் ஒன்று குரைப்பது போன்ற புகைப்படம், தயாரிப்பாளர்கள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு சம்பளம் கொடுப்பது என்றும், அதே நாய் சிரிப்புடன் இருக்கும் புகைப்படம் நடிகைகளுக்குத் தயாரிப்பாளர்கள் சம்பளம் கொடுப்பது என்றும் அந்தப் புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தப் புகைப்படத்தைப் பார்த்ததும், தயாரிப்பாளர்கள் பலர் கொதித்து எழுந்தனர். ‘கலையை நேசிக்கத் தெரியாத பணவெறி பிடித்த, உன் திமிர் பிடித்த விமர்சனத்திற்கு கண்டனம். நீ யாரைச் சொல்கிறாய்? உனக்கு வாய்ப்பு கொடுத்த விஷாலையா? லிங்குசாமியையா? மன்னிப்பு கேள், இல்லையென்றால் உன்னை கலைத் தாய் உணரச் செய்யும்’ என்று ட்விட்டரில் கொதித்துள்ளார் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார்.

‘சந்தோஷ் சிவனின் ட்வீட் பதிவு, மிகவும் கண்டனத்திற்குரியது. தயாரிப்பாளர்களைப் பற்றிய இவர்கள் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. இது சம்பந்தமாக இன்றே நடவடிக்கை எடுக்க ஆவன செய்யப்படும்’ என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக அவசரக் கூட்டத்தையும் இன்று மாலை நடத்த இருக்கிறது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய அந்த ட்வீட்டை நீக்கிவிட்டார் சந்தோஷ் சிவன். அத்துடன், ‘அது ஒரு ஃபார்வர்டு மெசேஜ். மதிப்புமிகு சில தயாரிப்பாளர்களையும் அந்த ட்வீட் காயப்படுத்தும் என்பதால், அந்த ட்வீட்டை நீக்கிவிட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார் சந்தோஷ் சிவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x