Published : 08 Apr 2019 05:32 PM
Last Updated : 08 Apr 2019 05:32 PM

ரஜினிக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில், ரஜினிக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு, வரும் 10-ம் தேதி மும்பையில் தொடங்குகிறது. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில்  தயாரிக்கவுள்ள இப்படத்துக்கான போட்டோஷுட், சமீபத்தில் நடைபெற்றது.

இந்த போட்டோஷுட்டின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானதால், படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

லீக்கான இந்தப் புகைப்படங்களின் மூலம், போலீஸ் அதிகாரியாக ரஜினி நடிப்பது உறுதியாகியுள்ளது. இந்தப் புகைப்படங்களில் போலீஸ் உடையின் மேல் பிரவுன் நிற கோட்டு போட்டுக் கொண்டு, கையில் கத்தியுடன் ரஜினி கம்பீரமாக அமர்ந்திருக்கிறார். இதில், ரஜினி இளமையாகவும் தெரிகிறார்.

இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாராவும், மகளாக நிவேதா தாமஸும் நடிக்கவுள்ளனர். நிவேதா தாமஸ், ‘பாபநாசம்’ படத்தில் கமலுக்கு மகளாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்யவுள்ள இப்படத்துக்கு, அனிருத் இசையமைக்கிறார்.

இந்நிலையில், ரஜினிக்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்தத் தகவலை படக்குழு மறுத்துள்ளது. மகேஷ் பாபு நடிப்பில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தில் வில்லனாக நடித்தவர் எஸ்.ஜே.சூர்யா.

தற்போது தமிழ்வாணன் இயக்கத்தில் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. அமிதாப் பச்சன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரஜினி வெளியிட்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x