Published : 29 Mar 2019 07:21 PM
Last Updated : 29 Mar 2019 07:21 PM

‘மாநாடு’ படத்தில் சிம்புவுடன் ஜோடிசேர்ந்த கல்யாணி ப்ரியதர்ஷன்

சிம்புவின் ‘மாநாடு’ படத்தில், அவருக்கு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கிய இந்தப் படம், ‘அத்தரண்டிகி தாரேதி’ தெலுங்குப் படத்தின் ரீமேக். மேகா ஆகாஷ், கேத்ரின் தெரேசா இருவரும் ஹீரோயின்களாக நடிக்க, முக்கியக் கதாபாத்திரத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்தார்.

இந்தப் படத்துக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். எடிட்டராக பிரவீன் கே.எல். ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சிம்புவின் பிறந்த நாளான பிப்ரவரி 3-ம் தேதி இந்தப் படத்தின் பூஜை பிரமாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. அத்துடன், இதுவரை படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் - நடிகைகள் விவரமும் அறிவிக்கப்படவில்லை.

இதனால், ‘மாநாடு’ படம் கைவிடப்பட்டதாகத் தகவல் பரவியது. ஆனால், அந்தத் தகவல் உண்மையில்லை என விளக்கம் அளித்தார் சுரேஷ் காமாட்சி. படப்பிடிப்பு குறித்த தகவல் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார் என ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். பிரபல இயக்குநர் ப்ரியதர்ஷன் மகளான இவர், சிவகார்த்திகேயன் ஜோடியாக தற்போது ஒரு தமிழ்ப் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை, ‘இரும்புத்திரை’ பி.எஸ்.மித்ரன் இயக்கி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x