Last Updated : 29 Mar, 2019 08:08 AM

 

Published : 29 Mar 2019 08:08 AM
Last Updated : 29 Mar 2019 08:08 AM

ரசிகர்கள் திட்டினால்தான் எங்களுக்கு வாழ்க்கை!- ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ சுவாதியின் நம்பிக்கை

‘‘சீரியலில் வெறும் நெகடிவ் விஷயங்கள் மட்டுமே பிரதானமாக இருந்தால்,  அதில் பெரிதாக சுவாரஸ்யம் இருக்காது. காமெடி தொடங்கி நல்ல சொந்தபந்தம்னு நேர்மறையான விஷயங்களும் சூழ்ந்திருக்கணும். அந்த மாதிரியான சீரியலில் நடிக்கும்போதுதான் நமக்கும் நிறைய நடிப்பதற்கு நல்ல ஸ்கோப் கிடைக்கும்!’’

என்கிறார் சுவாதி.  ‘ஜீ தமிழ்’ சேனலில் ஒளிபரப்பாகி வரும் ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ தொடரில் கண்மணி என்ற கதாபாத்திரம் வழியே வில்லியாக வந்து சின்னத்திரை ரசிகர்களின் கோபத்தை சம்பாதித்து வருபவர்தான் இந்த சுவாதி. அவருடன் தொடர்ந்து உரையாடியதிலிருந்து:

சுவாதிக்கு பெங் களூருதான் சொந்த ஊராமே?

ஆமாம். எம்பிஏ பட்டப் படிப்பை முடித்துவிட்டு பெங் களூருல ஒரு பிபிஓ கம்பெனியில வேலைக்கு போய்க்கிட்டிருந்தேன். அந்த சமயத்துல நடிப்பு மீது ஆர்வம் வந்தது. கன்னடம், தெலுங்குல கேரியரைத் தொடங்கினேன். என்னோட ஆர்வத்துக்கு  ‘ஸ்டார் சுவர்ணா’ கன்னட சேனலில் ஒளிபரப்பான ‘அம்ருதவர்ஷினி’ தொடர்ல வில்லி கேரக்டர் பெரும் அடையாளமாக அமைந்தது. இங்கே ‘ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி’ தொடர்தான் முதல் சீரியல். தமிழ் சின்னத்திரை வட்டாரத்துக்குள்ள மிகப் பெரிய கதாபாத்திரம் வழியே நுழைந்தது  பெரிய சந்தோஷம்.

கண்மணியாக வரும் சுவாதியை தமிழ் ரசிகர்கள் எப்படிப் பார்க்கிறாங்க?

ஒரு சீரியலில் நடிக்கும்போது அதிலும் என்னை  மாதிரி வில்லி கதாபாத்திரம் எடுத்துக்கும்போது ரசிகர்கள் திட்ட வேண்டும். அதுதான்  தேர்ச்சிக்கு முதல் தகுதி. ரசிகர்களிடம்  திட்டு வாங்கினால்தான் எங்களுக்கு அந்த சீரியல் நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்குன்னு அர்த்தம். அந்த வகையில் ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ பெரிய அடையாளம் கொடுத்திருக்கு.

வில்லியாக நடிக்கும் பெரும்பாலானவர்கள்  சீரியலில் பயன்படுத்தும் ஆடை, அணிகலன்களில் அதிகம் மெனெக்கெடுவது ஏன்?

பாசிட்டிவ் கதாபாத்திரங்களைவிட நெகட்டிவ் கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பவர்கள்தான் டிரஸ்ஸிங்ல ரொம்பவே கவனம் செலுத்துவாங்க.  அதுதான் முக்கியமும்கூட. வில்லி கதாபாத்திரத்தை மேக்கிங் விஷயத்தில் தனித்து எடுத்துக்காட்டுவதே ஆடை, அணிகலன்கள்தான். அதற்காக எல்லாவித மான சீரியல்களிலும் ஓவர் மேக்கப், ஓவர் காஸ்ட்யூம்ஸுன்னு இறங்கிட முடியாது. இப்போ நான் நடிக்கிற ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ தொடர் கிராமத்து பின்னணித் தொடர்.  இதில் ஸ்டைல் காட்ட முடியாது. அதுக்கு ஏற்ற மாதிரிதான் இதில் என்னோட டிரெஸ்ஸிங் இருக்கும். இருக்கணும்.

உங்களுடைய குடும்பப் பின்னணி?

மாமியார், மாமனார், கணவர், நான்னு 4 பேர் கொண்ட உலகம் என்னோடது. கணவர் பிசினெஸ்ல இருக்கார். அவரோட உறுதுணையில்தான் ஊர் தாண்டி வந்து நடிப்பில் கவனம் செலுத்த முடியுது.  தமிழ்ல  வர்ற இந்த ஒரு சீரியலில் மட்டும்தான் இப்போதைக்கு கவனம் செலுத்துறேன்.  ‘ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி’ குழு ரொம்பவே எனெர்ஜியான குழு. இந்த மாதிரி கூட்டணியில் வேலை பார்ப்பது ரொம்ப பெருமையாக இருக்கு.   இது தவிர,  ‘கஸ்தூரி’ கன்னட  சேனலில் ‘கஸ்தூரி கிச்சன்’ன்னு ஒரு குக்கரி நிகழ்ச்சியை சமீப காலமாக தொகுத்து வழங்க ஆரம்பித்திருக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x