Published : 27 Feb 2019 05:19 PM
Last Updated : 27 Feb 2019 05:19 PM
‘அடுத்த படத்துக்காக என் நம்பரை சேவ் பண்ணி வச்சுக்கோங்க’ என இயக்குநர் கே.வி.ஆனந்திடம் ஜாலியாகத் தெரிவித்துள்ளார் ஆர்யா.
‘கவண்’ படத்துக்குப் பிறகு கே.வி.ஆனந்த் இயக்கிவரும் படம் ‘காப்பான்’. இதில், ஹீரோவாக சூர்யா நடித்து வருகிறார். ‘அயன்’ மற்றும் ‘மாற்றான்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது.
மோகன்லால், பொமன் இரானி, ஆர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், ஹீரோயினாக சயிஷா நடிக்கிறார். ஆக்ஷன் த்ரில்லராக உருவாகிவரும் இந்தப் படத்துக்கு, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
லண்டனில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு, பல்வேறு இடங்களிலும் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மோகன்லால் சம்பந்தப்பட்டக் காட்சிகள் நிறைவடைந்தன.
இந்நிலையில், ஆர்யா சம்பந்தப்பட்டக் காட்சிகளும் நிறைவடைந்தன. இந்தத் தகவலை ட்விட்டரில் தெரிவித்துள்ளார் கே.வி.ஆனந்த். அதில், ‘பணியாற்றுவதற்கு சிறந்த மனிதர் ஆர்யா’ என்றும் கே.வி.ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்துள்ள ஆர்யா, “மிக்க நன்றி சார். உங்களுடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். அடுத்த படத்துக்காகத் தயவுசெய்து என்னுடைய நம்பரை சேவ் பண்ணி வச்சுக்கோங்க. சூர்யா சார், உங்களுடைய எல்லாவிதமான ஆதரவு மற்றும் அன்புக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT