Published : 20 Dec 2018 04:20 PM
Last Updated : 20 Dec 2018 04:20 PM

பூட்டு போட்டபோது செயல்படாத காவல்துறை; எதிர்த்துப் போராடுவோம்: விஷால் குமுறல்

''தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு உரிமையில்லாத நபர்கள் வந்து அலுவலகத்தைப் பூட்டியபோது வாய் திறக்காமல் இருந்த காவல்துறை, இப்போது எங்களைக் கைது செய்திருக்கிறது. இதனை எதிர்த்துப் போராடுவோம்'' என்று சங்கத்தின் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் வலுத்து வருகிறது. சங்கத்தின் தலைவர் விஷாலுக்கு எதிராக ஒரு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நேற்று (புதன்கிழமை) ஏ.எல்.அழகப்பன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சுரேஷ் காமாட்சி முதலான தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி, சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டுப் போட்டனர்.மேலும் ஏழு கோடி ரூபாய் வரை, விஷால் கையாடல் செய்துவிட்டார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் அடுக்கினர்.

இதுகுறித்து விஷால், பொதுக்குழுவில் கணக்குக் காட்டப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை அலுவலகத்துக்கு போடப்பட்ட பூட்டை உடைப்பதற்காக விஷால் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் வந்திருந்தனர். ஆனால் போலீஸார் அவர்களைத் தடுத்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், போலீஸார் விஷால் உள்ளிட்டவர்களைக் கைது செய்தனர்.

இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்துத் தெரிவித்துள்ள விஷால், ''நேற்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு உரிமையில்லாத நபர்கள் வந்து பூட்டியபோது வாய் திறக்காமல் இருந்த காவல்துறை, இன்று என்னையும், என் நண்பர்களையும் கைது செய்திருக்கிறது. இதில் எங்கள் மீது எந்தத் தவறும் இல்லாமல் கைது செய்யப்பட்டிருப்பதை உண்மையிலேயே நம்ப முடியவில்லை.

இதற்கு எதிராக நாங்கள் மீண்டும் போராடுவோம். இளையராஜாவின் நிகழ்ச்சி நடைபெறுவதற்கான அனைத்து வேலைகளையும் மேற்கொள்வோம். சிரமத்தில் இருக்கும் தயாரிப்பாளர்களுக்கு உதவ நிதி திரட்டுவோம்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x