Published : 28 Dec 2018 03:59 PM
Last Updated : 28 Dec 2018 03:59 PM
2019-ல் நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவிக்கு பாரதிராஜாவை போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால் மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டை வைத்துள்ள ஏ.எல்.அழகப்பன், சுரேஷ் காமாட்சி, ஜே.கே.ரித்தீஷ், எஸ்.வி.சேகர் உள்ளிட்ட உறுப்பினர்கள் டிசம்பர் 19-ம் தேதி தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்துக்குப் பூட்டு போட்டனர்.
இதைத் தொடர்ந்து மீண்டும் தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினை பூதகரமாக உருவானது. டிசம்பர் 20-ம் தேதி பூட்டைத் திறக்க விஷால் முயற்சித்தபோது, அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸாருக்கும் விஷாலுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், விஷால், மன்சூரலிகான் உள்ளிட்டவர்கள் பாண்டி பஜார் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக விஷால் மீது 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெறும் சர்ச்சைகள் தொடர்பாக சுரேஷ் காமாட்சி, எஸ்.வி.சேகர், ஜே.கே.ரித்தீஷ் உள்ளிட்டோர் பாரதிராஜா தலைமையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார்கள்.
திடீரென்று விஷாலுக்கு எதிரணியில் இருப்பவர்கள், பாரதிராஜா தலைமையில் முதல்வரை சந்தித்தது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதுகுறித்து முதல்வரை சந்தித்த அணியில் இருப்பவர்கள் சிலரிடம் பேசிய போது, "2019 மார்ச் மாதம் தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் பாரதிராஜாவை தலைவர் பதிவிக்குப் போட்டியிட வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம்.
தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட்டால், அவர் மீதிருக்கும் மரியாதை காரணமாக எதிர்த்து யாரும் நிற்கமாட்டார்கள். இதர பதவிகளுக்கு யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும். இன்னும், பாரதிராஜா சம்மதம் தெரிவிக்கவில்லை. ஆனால், எங்கள் சார்பில் அவரை தலைவர் பதவிக்கு நிற்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறோம்" என்று தெரிவித்தனர்.
2019-ல் நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கு இப்போதிலிருந்தே பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது விஷாலுக்கு எதிராகச் செயல்படும் அணி என்பது உறுதியாகியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT