Published : 20 Dec 2018 12:56 PM
Last Updated : 20 Dec 2018 12:56 PM
தயாரிப்பாளர் சங்கத்தில் போடப்பட்ட பூட்டு திறக்கப்பட்டது. அடுத்து என்ன நடக்கும் என பரபரப்புடன் இருக்கிறது திரையுலகம்.
தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் வலுத்து வருகிறது. சங்கத்தின் தலைவர் விஷாலுக்கு எதிராக ஒரு குழுவினர், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, நேற்று புதன்கிழமை 19ம் தேதி அன்று அழகப்பன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சுரேஷ் காமாட்சி முதலான தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி, சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டுப் போட்டனர்.
மேலும் ஏழு கோடி ரூபாய் வரை, விஷால் கையாடல் செய்துவிட்டார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் அடுக்கினர்.
இதுகுறித்து விஷால், பொதுக்குழுவில் கணக்குக் காட்டப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் அலுவலகத்துக்கு போடப்பட்ட பூட்டை உடைப்பதற்காக விஷால் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் வந்திருந்தனர். ஆனால் போலீசார் அவர்களை தடுத்தனர். இதனால் அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒருகட்டத்தில், போலீசார் விஷால் உள்ளிட்டவர்களை கைது செய்தார்கள்.
அப்போது, நடிகர் விஷால் தெரிவித்ததாவது:
யாரோ ஒருத்தங்க பூட்டுப் போட்டிருக்காங்க. அதை உடைச்சிட்டு, எங்க ஆபீசுக்குப் போறதுக்கு போலீசார் எங்களை அனுமதிக்கலை. தடுத்துக்கிட்டே இருந்தாங்க. திருட்டுப் பூட்டுக்கு போலீஸ் காவல் காக்கிறாங்க. ஏன் இப்படி பண்றீங்கன்னு கேள்விகள் கேட்டதுக்கு, எங்களை அரெஸ்ட் பண்ணிட்டாங்க.
இப்படிலாம் நடக்குமா, இப்படிலாம் கூட செய்வாங்களா? நம்பவே முடியல. ஆச்சரியமாவும் அதிர்ச்சியாவும் இருக்கு.
இவ்வாறு விஷால் தெரிவித்தார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கப் பிரச்சினைக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சங்கத்தின் பிரச்சினைகளை கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதுகுறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு தரப்பினர் அதாவது விஷால் தரப்பினர் பூட்டுப் போட்டிருந்தனர். இப்போது அந்தப் பூட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT