Last Updated : 20 Dec, 2018 11:19 AM

 

Published : 20 Dec 2018 11:19 AM
Last Updated : 20 Dec 2018 11:19 AM

தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏன் பூட்டு?; ஸ்டெர்லைட்டுக்கு பூட்டு போட்டிருக்கலாமே! - மன்சூரலிகான் கிண்டல்

தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏன் பூட்டு போட்டார்கள், ஸ்டெர்லைட்டுக்கு பூட்டு போட்டிருக்கலாமே என்று மன்சூரலிகான் தெரிவித்துள்ளார். 

தயாரிப்பாளர் சங்கத்தில் மோதல் வலுத்து வருகிறது. சங்கத்தின் தலைவர் விஷாலுக்கு எதிராக ஒரு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, நேற்று புதன்கிழமை 19-ம் தேதி அன்று அழகப்பன், அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சுரேஷ் காமாட்சி, ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், முதலான தயாரிப்பாளர்கள் ஒன்று கூடி, சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்குப் பூட்டுப் போட்டனர்.

மேலும் ஏழு கோடி ரூபாய் வரை, விஷால் கையாடல் செய்துவிட்டார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளையும் அடுக்கினர். இதுகுறித்து விஷால், பொதுக்குழுவில் கணக்குக் காட்டப்படும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், இன்று விஷால் தரப்புக்கு ஆதரவாக நடிகர் மன்சூரலிகான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சங்கம் என்று இருந்தால் பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். தயாரிப்பாளர் சங்கம் இப்போதுதான் ஒவ்வொரு பிரச்சினையாக சரி செய்துகொண்டு வருகிறது. பெரிய நடிகர்கள் கோடி கோடியாக சம்பளம் வாங்கிக் கொள்கிறார்கள். ஐயாயிரம், ரெண்டாயிரம், ஆயிரம் ரூபாய் என ஒரு டிக்கெட்டை விற்கிறார்கள். எல்லா தியேட்டர்களிலும் குறைவான கட்டணம் வசூலிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அம்மா கிரியேஷன்ஸ் சிவா, நல்ல மனிதர். இன்னும் ரெண்டுமூணு பேர் நல்லவர்கள்தான். ஆனால் தவறான முடிவு எடுத்து செயல்பட்டு வருகிறார்கள்.

சங்க அலுவலகத்திற்கு பூட்டுப் போட்டுவிட்டால், முடிந்துவிட்டதா? செயல்படமுடியாதா? இவர்கள் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு போடாமல், ஸ்டெர்லைட்டுக்கு பூட்டு போட்டிருக்கலாம். நாங்கள், நாம் தமிழர் சீமான் எல்லோரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடுவோமே!

இவ்வாறு மன்சூரலிகான் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x