Published : 10 Oct 2018 04:00 PM
Last Updated : 10 Oct 2018 04:00 PM

ரஜினி படத்தை இயக்குவேனா?- தனுஷ் பதில்

ரஜினி நடிப்பில் படம் இயக்குவீர்களா? என்ற கேள்விக்குப் பதில் அளித்துள்ளார் தனுஷ்.

நடிகராக மட்டுமின்றி, பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் எனப் பலத் திறமைகள் கொண்டவர் தனுஷ். அவர் இயக்குநராக அறிமுகமான படம் ‘பவர் பாண்டி’. ராஜ்கிரண், ரேவதி, தனுஷ், மடோனா செபாஸ்டியன், பிரசன்னா, சாயா சிங் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர்.

இதைத் தொடர்ந்து தற்போது ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் இரண்டாவது படத்தை இயக்கி வருகிறார். தனுஷே ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தில், நாகார்ஜுனா, அதிதி ராவ், சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு, ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றுகிறார்.

இந்நிலையில், தனுஷ் நடித்துள்ள ‘வடசென்னை’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று (அக்டோபர் 10) நடைபெற்றது. இதில், ‘ரஜினி நடிப்பில் படம் இயக்குவீர்களா?’ என்று தனுஷிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

“நானா வேண்டாம்னு சொல்றேன், கிடைக்கணும்ல. கிடைச்சா ஓகே. அதுமாதிரி வாய்ப்பெல்லாம் அமையணும். அது ஒரு ஆசீர்வாதம். எந்தெந்த அரிசியில் யார் யார் பெயர் எழுதியிருக்கிறதோ, அது அவங்கவங்களுக்கு போய்ச் சேரணும். எதிர்காலத்தில் அப்படி அமைந்தால், அதைவிட வேறென்ன வேண்டும்?” என்று அந்தக் கேள்விக்குப் பதில் அளித்தார் தனுஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x