Published : 18 Aug 2018 08:56 PM
Last Updated : 18 Aug 2018 08:56 PM

விஜய், அல்லு அர்ஜுனுக்குப் பிடித்த கதை இந்த ‘ஜீனியஸ்’: சுசீந்திரன்

விஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவிக்குப் பிடித்த கதை இந்த ‘ஜீனியஸ்’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் சுசீந்திரன்.

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘ஜீனியஸ்’. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் பேசிய சுசீந்திரன், ‘விஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவிக்குப் பிடித்த கதை’ என்றார்.

“நான் ‘ஜீனியஸ்’ படத்தின் கதையை முதலில் யோசித்தபோது, அது கதையாக இல்லை; கருவாகத்தான் இருந்தது. நான் இந்தக் கதையையும் , கதாபாத்திரத்தைப் பற்றியும் பலரிடம் ஒன் லைனாகக் கூறியுள்ளேன். அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதை எப்படிக் கதையாக மாற்றுவது என்று பல வருடங்களாக யோசித்து வந்தேன்.

அது கதையாக மாறிய பின்பு, விஜய் , அல்லு அர்ஜுன் , ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடமும் கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்தக் கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சில காரணங்களால் அவர்கள் நடிக்க முடியவில்லை. கடைசியாக, அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று, தற்போது ‘ஜீனியஸ்’ படமாக வந்துள்ளது.

இப்படம், மக்களுக்கு கருத்து சொல்லும் பொழுதுபோக்குப் படமாக இருக்கும். இந்தியில் வெளிவந்து, மாபெரும் வெற்றிபெற்ற ‘பிகே’ படத்தை எனக்குப் பிடிக்கும். அந்தப் படத்தின் பாதிப்பில்தான் இந்தப் படத்தை இயக்கியுள்ளேன். ‘பிகே’போல இதுவும் மெசேஜ் சொல்லும் என்டெர்டெயினாராக இருக்கும்.

இப்படத்தின் கதை, அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால், படத்தை இந்தி மற்றும் தெலுங்கிலும் வெளியிட முடிவு செய்துள்ளோம். ரோஷனை இப்படத்தின் மூலமாகத் தயாரிப்பாளராகவும் , ஹீரோவாகவும் அறிமுகம் செய்வதில் எனக்குப் பெரும் மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார் சுசீந்திரன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x