Published : 16 Jan 2018 06:37 PM
Last Updated : 16 Jan 2018 06:37 PM

கல்வித் திணிப்பு குறித்த கதையைப் படமாக்கும் சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கும் புதிய படத்துக்கு ஜீனியஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கல்வித் திணிப்பு மற்றும் அதனால் வரும் மன அழுத்தம் குறித்தும் இப்படம் பதிவு செய்வதாக சுசீந்திரன் கூறியுள்ளார்.

'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தை இயக்கிக் கொண்டே, முற்றிலும் புதுமுகங்களைக் கொண்டு புதிய படமொன்றையும் இயக்கி வந்தார் சுசீந்திரன். சுமார் 90% படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இதில் புதுமுக நடிகர்களோடு சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இதனிடையே சந்தானம் நடிப்பில் அடுத்த படத்தை சுசீந்திரன் இயக்குகிறார் என்று சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. இந்நிலையில் தனது அடுத்த படம் குறித்து சுசீந்திரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''ஏஞ்சலினாவைத் தொடர்ந்து எனது இயக்கத்தில் அடுத்த படமான 'ஜீனியஸ்' படப்பிடிப்பை இன்று தொடங்கி உள்ளோம். இப்படத்திலும் புதுமுகங்களே நடிக்கின்றனர்.

இன்றைய சமூக சூழலில் குழந்தைகளுக்கு நாம் கல்வியைத் திணிப்பதால் அவர்கள் எந்த அளவுக்கு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள், அப்படி மன அழுத்தத்திற்கு ஆளான ஒருவன், அவன் மனநிலை, அவன் வாழ்க்கை என ஒரு கதாபாத்திரத்தைச் சுற்றி கதை அமைந்துள்ளது. இப்படம் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு பதிவாக இருக்கும்'' என்று சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x