Published : 09 Jan 2018 06:27 PM
Last Updated : 09 Jan 2018 06:27 PM

நடிகர் சங்க கட்டிட நிதி குறித்து அஜித் கூறியது என்ன?- எஸ்.வி.சேகர் தகவல்

நடிகர் சங்க கட்டிடத்துக்கு மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை அஜித் விரும்பவில்லை என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

மலேசியாவில் நட்சத்திர கலைவிழாவை முடித்து, நடிகர்கள் சென்னை திரும்பியுள்ள சூழலில், நடிகர் சங்கத்தின் டிரஸ்டி பதவியிலிருந்து எஸ்.வி.சேகர் ராஜினாமா செய்தார். ராஜினாமாவுக்கான காரணத்தை விளக்கி தலைவர் நாசருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த எஸ்.வி.சேகர் கூறுகையில், ''நடிகர் சங்க கட்டிடத்துக்கு மக்களிடமிருந்து பணம் வசூலிப்பதை அஜித் விரும்பவில்லை. மலேசிய நட்சத்திரக் கலைவிழாவில் பங்கேற்க வேண்டும் என்று நடிகர் சங்கம் சார்பில் அஜித்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அஜித் அதை விரும்பவில்லை.

மக்கள் படம் பார்ப்பதற்காக தியேட்டரில் டிக்கெட்டுக்கு பணம் கொடுக்கிறார்கள். அதன்மூலம்தான் நாம் சம்பாதிக்கிறோம். அதனால் நடிகர் சங்க கட்டிடத்துக்கு நடிகர்களாகிய நாமே நிதி அளிக்கலாம். அதைத் தவிர்த்து ஏன் நட்சத்திரக் கலைவிழா நடத்தி மக்களிடம் பணம் வசூலிக்க வேண்டும் என்று அஜித் கேட்டார்'' என்று எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

முன்னதாக, தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக திரைத்துறையினர் கலந்துகொள்ளும் கலை நிகழ்ச்சிகள், கிரிக்கெட் போட்டி உள்ளிட்டவைகளை நடத்த நடிகர் சங்கம் திட்டமிட்டது. கடந்த 6-ம் தேதி மலேசியாவில் உள்ள புக்கிஜாலி ஸ்டேடியத்தில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் விஜய், அஜித் இருவரும் பங்கேற்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x