Published : 10 Aug 2023 05:33 AM
Last Updated : 10 Aug 2023 05:33 AM

‘இறுகப்பற்று’ உருவாக எது காரணம்? - இயக்குநர் யுவராஜ் தயாளன்

“கடந்த சில வருஷங்களா நிறைய விவாகரத்துகள், கணவன் மனைவி பிரிவுகள் நடந்துட்டு இருக்கு. முந்தையகாலகட்டங்கள்ல எங்கயோ, எப்பவோ கேள்விப்படற ‘டைவர்ஸ்’ இன்னைக்கு சர்வசாதாரணமா நடக்குது. ஏன் இப்படி நடக்குதுன்னு யோசிக்க ஆரம்பிச்சதுதான், ‘இறுகப்பற்று’ உருவாக காரணம். கல்யாணத்துக்கு பிறகு நடக்கிற பிரச்சினைகளை இந்த படம் பேசும்” என்கிறார் இயக்குநர் யுவராஜ் தயாளன். இதற்கு முன்பு, கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் அறிமுகமான ‘போட்டா போட்டி’, வடிவேலு நடித்த ‘தெனாலிராமன்’, ‘எலி’ படங்களை இயக்கியவர் இவர்.

‘இறுகப்பற்று’ படத்துல விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என நிறைய ஸ்டார்ஸ் இருக்காங்களே...

இருக்கிற எல்லா ஸ்டாரும் நடிக்கிற அளவுக்குகூட, இந்த விஷயத்துல என்கிட்ட கதைகள்இருக்கு. இந்த படத்துக்காக கொஞ்சம் ஆய்வுபண்ணுனதுல அவ்வளவு விஷயங்கள் கிடைச்சது. இருந்தும் எல்லாத்தையும் ஒரே படத்துல சொல்லிட முடியாது. ஒரே கதாபாத்திரத்தோட முடிச்சுடவும் முடியாது. மூணு ஜோடி இருந்தா, மூணு விஷயங்கள் பேசலாம்னுநினைச்சேன். விக்ரம் பிரபு - ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த் - அபர்நதி, ஸ்ரீ - சானியா ஐயப்பன்மூலமா கதையை சொல்றேன். நாம சந்திக்கிற விஷயம்தான்கறதால எல்லோருமே கதையோட ஒன்ற முடியும். மெசேஜ் ஏதும் சொல்லலை.

உங்கள் முந்தைய 3 படமும் காமெடி கதைதான். திடீர்னு சீரியஸ் கதைக்கு வந்துட்டீங்களே, ஏன்?

இது சீரியஸ் கதை மட்டுமல்ல. இதுல எல்லாமே இருக்கும். என் முதல் படத்தை, சடகோபன் ரமேஷுக்காக பண்ணினேன். அவர்கேட்டதுக்காக இயக்கினேன். அப்ப எனக்கு குறைவான வயசு. அடுத்தடுத்த படங்களும் எனக்காக பண்ணின படங்கள் இல்லை. அப்படி படங்கள் பண்ணச் சொல்லி கேட்டாங்க, அதனால அப்படி பண்ணினேன். ஆனா, எனக்குள்ள இப்படி சில படங்கள் பண்ணணும்னு இருக்குமில்லையா? அந்த ஆசை, ஆர்வம் அப்படியேதான் இருக்குது. அப்படி ஒரு கதைதான் இது. அதை இயக்குவதற்கும் இப்பதான் வாய்ப்பு அமைஞ்சது.

‘இறுகப்பற்று’ - ஏன் இந்த தலைப்பு?

‘ஒன்றாக இருங்க’ன்னு சொல்றேன். பற்றுதலோடு இருங்கன்னும் எடுத்துக்கலாம். இப்ப ஹாரர், டார்க் காமெடி, த்ரில்லர் படங்கள் அதிகமா வந்திட்டிருக்கிற மாதிரி, குடும்பகதைகளுக்கான ஓர் இடத்தை, ‘இறுகப்பற்று’ படம் ரிலீஸுக்கு பிறகு கொண்டு வரும்னு நம்பறேன். இயக்குநர் தியாகராஜா குமாரராஜா ஒரு பேட்டியில, ‘ஒரு நல்ல கதையை தயாரிப்பாளர் நிராகரிச்சார். ஏன்னு கேட்டதும் இந்த மாதிரி படங்கள் வந்ததில்லை, அதனாலதான்’னு சொன்னதாக சொல்லியிருந்தார். இந்த படமும் அப்படிப்பட்ட ஜானர்தான். எப்பவும் கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த கதையை எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியாமதான் போய் சொன்னேன். ஆனா, அவங்க இதை பண்ணலாம்னு சொன்னாங்க. அதுவே நல்ல விஷயமா எனக்குத் தோணுச்சு.

‘எலி’ படத்துக்கு பிறகு அடுத்த படத்துக்கு ஏன் தாமதம்?

அந்த படத்தை நான் சரியா பண்ணியிருந்தா, அடுத்த படம் உடனே கிடைச்சிருக்கும்.அதுதான் காரணம். பிறகு கொஞ்சம் டைம் எடுத்து அடுத்த கதையை பண்ணினேன். அதை தயாரிப்பாளரும் ஏத்துக்கணும். அதனாலதான் தாமதம்.

வடிவேலு ஹீரோவா நடிச்ச 2 படங்களை இயக்கி இருக்கீங்க. இப்ப ‘மாமன்னன்’ படத்துல அவர் குணசித்திர வேடத்துல நடிச்சிருக்கார். எப்படி பார்க்குறீங்க?

நான் அவர் கூட படம் பண்ணும்போதே, இதை சொல்லியிருக்கேன். உங்களுக்குள்ளகாமெடியன் மட்டுமல்ல, வேறொரு முகம் இருக்குனு பேசியிருக்கேன். நான் நினைச்ச படம் பண்ணும்போது உங்களை அப்படி பயன்படுத்த ஆசை இருக்குன்னும் சொல்லியிருக்கேன். அப்பலாம், ‘நான் சிரீயஸ் கேரக்டர் பண்ணினா, ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்க, குழந்தைகளுக்கு பிடிக்காம போயிரும்’னு அவர் சொல்வார். ஆனா அவரை நான் எப்படி பார்க்கணும்னு ஆசைப்பட்டேனோ, அதே மாதிரியான ஒரு கேரக்டர்ல, மாரி செல்வராஜ் இயக்கத்துல பார்த்ததும் பிடிச்சிருந்தது. படம் பார்த்துட்டு அவருக்கு போன் பண்ணி, இப்படியொரு கேரக்டர்ல நீங்க நடிச்சதுக்கு நன்றின்னு சொன்னேன்.

நீங்க வடிவேலு கூட படம் பண்ண மீண்டும் வாய்ப்பு இருக்கா?

ஏன் இல்லை.. இதுக்கு முன்னால அவரோட நான் பண்ணின படங்கள், நான் நினைச்ச மாதிரி வரலை. இனி பண்ணினா நான் நினைச்ச மாதிரியான படங்களை பண்ண முடியும்னு நம்பறேன்.

இப்ப ஹாரர், டார்க் காமெடி, த்ரில்லர் படங்கள் அதிகமா வந்திட்டிருக்கு. அதுமாதிரி, குடும்ப கதைகளுக்கான ஓர் இடத்தை, ‘இறுகப்பற்று’ கொண்டு வரும்னு நம்பறேன்.இது சீரியஸ் கதை மட்டுமல்ல. இதுல எல்லாமே இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x