Published : 14 Oct 2017 12:22 PM
Last Updated : 14 Oct 2017 12:22 PM
தயாரிப்பாளர் சங்கம் திரையரங்குகளுக்கு விதித்துள்ள 5 விதிமுறைகளைக் குறிப்பிட்டு, குரோம்பேட்டை வெற்றி திரையரங்க உரிமையாளர் பதிலளித்தார்.
கடந்த சில நாட்களாக கேளிக்கை வரி குறைப்பு, திரையரங்கு டிக்கெட் கட்டணம் தொடர்பாக தமிழக அரசுடன் தமிழ்த் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். இதற்கு நேற்று(அக்டோபர் 13) சுமுக முடிவு எட்டப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷால் திரையரங்குகளுக்கு புதிய 5 விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தியுள்ளார். தயாரிப்பாளர் சங்கத்தின் அறிவிப்பு குறித்து சென்னையில் முக்கியமான திரையரங்கமான குரோம்பேட்டை வெற்றி திரையரங்கின் உரிமையாளர் ராகேஷிடம் கேட்ட போது, தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ள ஒவ்வொரு விதியையும் குறிப்பிட்டு பதிலளித்தார். அவை இங்கே
* இனி ஆன்லைன் மற்றும் பார்க்கிங் கட்டணம் கிடையாது:
வெற்றி திரையரங்க உரிமையாளர்: திரையரங்கு அமைந்துள்ள இடம் எங்களுடையது. அதற்கு அரசாங்கம் விதிமுறைகளைக் கொடுக்கட்டும். தயாரிப்பாளர் சங்கம் விதிமுறைகளை போட முடியாது. பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அரசாங்கம் புதிய விதிமுறைக் கொண்டு வந்தால் செய்யலாம். அரசாங்கமே விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் ஆகியவற்றில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கிறது. விஷால் நேரடியாக அங்கும் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று கூற முடியுமா?. திரையரங்கத்தில் வசூலிக்கப்படும் பார்க்கிங் கட்டணத்தை நெறிமுறைப்படுத்தலாம்.
ஆன்லைன் கட்டணத்தைப் பொறுத்தவரை தனியார் இணையதள நிறுவனங்கள் சர்வர் உள்ளிட்டவற்றை உபயோகப்படுத்தி செயல்பட்டு வருகிறார்கள். அதற்கு பணம் செலவழிக்க வேண்டியதுள்ளது. அதை எப்படி இலவசமாக அளிக்கச் சொல்ல முடியும்?
இந்தியா முழுவதும் இணையம் வழியே நடக்கும் வியாபாரங்கள் அனைத்திற்குமே சர்வீஸ் சார்ஜ் என்ற முறையில் பணம் வாங்குகிறார்கள்.
* இன்றுமுதல் அரசு நிர்ணயம் செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்கவேண்டும்..
வெற்றி திரையரங்க உரிமையாளர்: தமிழக அரசு எங்களது கோரிக்கையை ஏற்று, எங்களுக்காக டிக்கெட் விலையை நிர்ணயம் செய்து அளித்திருக்கிறார்கள். இனிமேல் அதை மட்டுமே வசூலிக்கவுள்ளோம்.
* கேண்டீனில் MRP விலைக்குதான் விற்கவேண்டும்..
வெற்றி திரையரங்க உரிமையாளர்: மற்ற திரையரங்குகளைப் பற்றி பேச விரும்பவில்லை. எனது திரையரங்கில் MRP விலைக்கு தான் விற்கிறோம். ஆனால், நாங்களே தயாரிக்கும் பொருட்களுக்கு நானே தான் நிர்ணயம் செய்துக் கொள்ள முடியும். அதற்கு முறையாக வரி கட்டி விடுகிறோம். ஒழுங்காக வரி செலுத்தும்போது நான் ஏன் விற்கக் கூடாது. ஸ்டார் ஹோட்டலில் ஒரு தோசையை 250 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதை யாரும் போய் வாங்கி சாப்பிடுவதில்லை. அவர்களுக்கு எங்கு தேவையோ அதை தான் வாங்கிச் சாப்பிடுகிறார்கள். நாங்கள் யாரையும் போய் இங்கு தான் வாங்கி உண்ண வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை.
*அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்படவேண்டும்..
வெற்றி திரையரங்க உரிமையாளர்: நாங்கள் என்ன தேவையோ, அந்த தண்ணீர் பாட்டில் விற்றுக் கொள்ளப் போகிறோம். எங்களது திரையரங்கில் இலவசமாக RO தண்ணீர் அளிக்கிறோம்.
* தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்கவேண்டும்..
வெற்றி திரையரங்க உரிமையாளர்: இளைஞர்கள் VODKA கலந்து எடுத்து வருகிறார்கள். குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், வயதானவர்கள் ஆகியோருக்கு தண்ணீர் அனுமதிக்கிறோம். இளைஞர்களுக்கு அனுமதியளிப்பதில்லை. வலுவான தண்ணீர் பாட்டிலில் எடுத்து வந்தால், அதை தூக்கி திரையரங்கிற்குள் அடிக்கிறார்கள், வீசுகிறார்கள். ஆகையால் மட்டுமே, எனது திரையரங்கில் அரை லீட்டர் தண்ணீர் பாட்டில் விற்கிறோம்.
தனித்தனி கேள்விக்கான பதிலைத் தொடர்ந்து, "என்னுடைய இடத்தில் நீங்கள் இதெல்லாம் செய்யக் கூடாது என்று சொல்லும் போது, நாங்களும் இதெல்லாம் நீங்களும் செய்யக் கூடாது என்று சொல்ல முடியுமா? அது உங்களுடைய சுதந்திரம். ஒரு தயாரிப்பாளர் உங்களுக்கு எந்த இடத்தில் உணவு வாங்கி அளிக்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம். மேலும், பிரம்மாண்டமான இயக்குநரிடம் சென்று நீங்கள் அடுத்த படத்தை 10 கோடி ரூபாய்க்கு தான் செய்ய வேண்டும் என்று சொல்ல முடியுமா?
படத்தின் பொருட்செலவைக் குறைக்க வேண்டுமானால், முதலில் நடிகர்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும். அவர்களுடைய திறமைக்கு தகுந்தாற் போல் வாங்கிக் கொள்கிறார்கள். அந்த மாதிரி இது என்னுடைய வியாபாரம். அதை எப்படி செய்ய வேண்டும் என்று யாரும் எங்களைச் சொல்ல முடியாது.
சிரமப்பட்டு திரையரங்கை மாற்றியமைத்திருக்கிறோம். முன்பைப் போல பல படங்கள் ஓடுவதில்லை. திருட்டு விசிடி அதிகமாக இருக்கும் போது, மக்கள் திரையரங்கிற்கு வருவதில்லை. ஆகையால், இதர வருமானங்களை நாடியே எங்களுடைய வியாபாரம் இருக்கிறது. எங்களுக்கு அவர்கள் சட்டம் வகுக்கும் போது, நாங்களும் அவர்களுக்கு வகுத்தால் தமிழ் திரையுலகில் வியாபாரம் சுமுகமாக நடைபெறாது.
இவ்வாறு ராகேஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT