Published : 26 Oct 2017 04:58 PM
Last Updated : 26 Oct 2017 04:58 PM

2.0 தமிழ்ப் படம் அல்ல: செய்தியாளர் சந்திப்பில் சுவாரஸ்யத் துளிகள்

விழா தொகுப்பாளரின் கேள்வியொன்றுக்குப் பதிலளித்த இயக்குநர் ஷங்கர் '2.0' படம் தமிழ்ப் படம் அல்ல, இந்தியப் படம் என்று கூறினார்.

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் '2.0'. இதன் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றதால், விளம்பரப்படுத்தும் பணிகளைத் துரிதப்படுத்தியுள்ளது படக்குழு.

இதன் முதற்கட்டமாக துபாயில் நாளை (அக்.27) பிரம்மாண்டமான முறையில் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இவ்விழாவில் துபாய் மன்னர் கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக துபாயில் படக்குழு இன்று (வியாழக்கிழமை) பத்திரிகையாளர்களை சந்தித்தது. இச்சந்திப்பில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன், இயக்குநர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் கலந்து கொண்டனர்.

இதில் அனைவரும் பேசியதாவது:

 

ஷங்கர்

'2.0' படம் தமிழ்ப் படம் அல்ல,  இந்தியப் படம் போலவும் இருக்காது, ஹாலிவுட் தரத்துக்கு இணையாக இருக்கும். படத்தில் அறிவியல், சமூகம், கற்பனை கலந்திருக்கும்.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஷங்கருடன் முதல் படத்தில் இருந்தே பணிபுரிந்து வருகிறேன். அப்போதிரு ந்தே அவரைக் கவனித்து வருகிறேன். இப்படத்திலும் கதையை ஆரம்பத்தில் எப்படிச் சொன்னாரோ அப்படியே, ஆன்மா குலையாமல் அப்படியே எடுத்திருக்கிறார்.

அக்‌ஷய்குமார்

இந்தப் படத்தில் நான் வில்லனாக நடித்திருக்கிறேன். ஆனாலும் ரஜினி சாரின் நடிப்பு அதை மிஞ்சிவிட்டது. இது முற்றிலும் எனக்கு வித்தியாசமான அனுபவம். ஷங்கர் ஓர் இயக்குநராக மட்டும் அல்லாமல் அறிவியலாளராகவும் இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்.

யாராலும் நம்பவே முடியாத விஷயங்கள் படத்தில் ஏராளம் இருக்கின்றன. ஒப்பந்தத்தின் காரணமாக இதற்கு மேல் படத்தின் கதை குறித்து என்னால் எதுவும் கூற இயலாது.

ஏமி ஜாக்சன்

படத்துக்காகப் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். குறிப்பாக ஹாலிவுட் தரத்துக்கு இணையாக படத்தை எடுத்துள்ள லைகா நிறுவனத்துக்கு நன்றிகள். ஹாலிவுட் கலைஞர்கள் அனைவரின் திறனையும் ஒருங்கிணைத்து, இந்தியாவுக்குக் கொண்டுவந்த ஷங்கருக்கு நன்றி.

படத்தில் திறமைமிக்க கலைஞர்கள் பலர் இணைந்துள்ளனர். படம் மிகுந்த பொருட்செலவில் 3டி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது.

ரஜினி

கடவுளின் கருணையாலும் மக்களின் அன்பாலும்தான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன். 2.0 படத்தில் என்னை நடிக்க வைத்த தயாரிப்பாளர் சுபாஷ்கரன் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு நன்றி.

பெருமைமிக்க இந்த படத்தின் ஒரு பங்காக நான் இருப்பதில் மகிழ்ச்சி. இது நிச்சயம் பெருமைக்குரிய, பெரிய பட்ஜெட் படமாக இருக்கும். 2.0 வெளியானபிறகு இந்தியர்கள் மட்டுமின்றி அயல் நாட்டினரும் படத்தைக் கொண்டாடுவர்.

இவ்வாறு அனைவரும் பேசினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x