

ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் நடிக்கும் திரைப்படம், ‘வாரணாசி’. ஆக் ஷன் அட்வெஞ்சர் ஃபேன்டஸி படமான இதன் கதையை ராஜமவுலியின் தந்தை, விஜயேந்திர பிரசாத் எழுதியுள்ளார். இப்படம், 2027ம் ஆண்டு ஏப்.7-ல் வெளியாகிறது.
முக்கியமான காட்சிகள் கென்ய காடுகளில் படமாக்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் இப்படத்தைக் கொண்டு செல்ல படக்குழு முடிவு செய்துள்ளது. இதனால் அதிக பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருகிறது. மெக்சிகோவில் நடைபெற்ற காமிக் கான் விழாவில் இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இப்படக்குழு சார்பில் கலந்துகொண்ட தயாரிப்பாளர் எஸ்.எஸ்.கார்த்திகேயா, இந்திய இதிகாசங்களுக்கும் லத்தீன் அமெரிக்கக் கலாச்சாரத்துக்கும் உள்ள ஒற்றுமை குறித்து விளக்கம் அளித்தார்.
“இந்தியாவில் ராமாயணம் மற்றும் மகா பாரதம் போன்ற இதிகாசங்களில் இருந்து நாங்கள் பெருமளவு உத்வேகம் பெறுகிறோம். ‘வாரணாசி’ படத்தில் சுமார் 20 நிமிடம் நீளமுள்ள ராமாயணக் காட்சிகள் பிரம்மாண்டமாக இடம்பெற்றுள்ளன” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.