Lubber Pandhu: யசோதா, துர்கா காட்டும் ‘கெத்து’ம் அன்பும் | திரை தேவதைகள் 16

Lubber Pandhu: யசோதா, துர்கா காட்டும் ‘கெத்து’ம் அன்பும் | திரை தேவதைகள் 16
Updated on
5 min read

சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்துவதே சமூகப் பார்வை கொண்ட படைப்பாளியின் இலக்காகவும் இருக்க இயலும். அதை அந்தப் படைப்பாளி அனல் பறக்கவும் சொல்லலாம் அல்லது அரவணைத்தும் சொல்லலாம். நாம் இன்னது என்று வரையறுக்க இயலாத பல உத்திகளை அறிந்தவராக இருப்பவர்தான் ஒரு சமூகப் படைப்பாளியாக தனித்து நிற்கிறார்.

அப்படியாக ஒரே திரைப்படத்தில் மனித மனங்களில் உள்ள வன்மமற்ற போட்டி, பொறாமைகள், உள்ளூர் கிரிக்கெட் வரை புரையோடிப்போன சாதிய வன்மம், பெண்களின் சுயமரியாதை எனப் பல பரிமாணத்தில் சுழன்று லப்பர் பந்தில், ஒரு வேர்ல்டு டோர்னமென்ட் விளையாடி பெறும் வெற்றிக்கு நிகரான வெற்றியை கொடுத்திருக்கிறார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. தனது முதல் போட்டியின் முதல் பந்தில் சிக்ஸர் சுழற்றும் வீரரைப் போல சுழன்றடித்திருக்கிறார்.

இப்போது புரிந்திருக்கும் திரை தேவதைகள் வாசகர்களுக்கு, இந்த அத்தியாயத்தில் நாம் பேசும் படம் 2004-ல் வெளியான ‘லப்பர் பந்து’ என்பது. இப்படம் இப்போது ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

‘அட்டக்கத்தி’ புகழ் தினேஷ், ஹரிஷ் கல்யாண், ஸ்வாஸிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, காளி வெங்கட், பால சரவணன், கீதா கைலாசம் என முத்தான கலைஞர்களை தேர்வு செய்து தமிழரசன் இந்த ஸ்போர்ட்ஸ் டிராமா ஜானர் படத்தை இயக்கியிருக்கிறார்.

படத்தின் ஆரம்பமே அதகளம்தான். கிரிக்கெட் மைதானத்தில் பந்துகளை சிக்ஸர், பவுண்டரிகளுக்குள் பூமாலை விளாசிக் கொண்டிருக்க, டிராக்டரில் மாஸ் என்ட்ரி கொடுப்பார் யசோதா. ஆடுகள வீரர்களும், மைதான கரகோஷ விசிறிகளும், கமென்ட்ரி கொட்டகையில் இருப்போரும் “ஆத்தீ கெத்து பொண்டாட்டி வரா பாருன்னு” என்று சொல்ல, பூமாலையும் அவரது ஆதரவு கோஷ்டி கூட்டமும் நான்கு திசையிலும் கலைந்தோடும். கெத்து பொண்டாட்டியா, ‘கெத்து’ பொண்டாட்டியாக கடுகடுத்த முகத்துடன் வந்து நிற்பாள் யசோதா.

உள்ளே அன்பும் அக்கறையும் புதைந்திருக்க, வெளியே முகத்திலும் செயலிலும் காட்டப்படும் கடுமையானது, அந்தக் கடுமைக்கு உள்ளாகும் நபரை பெட்டிப் பாம்புபோல் அடங்கியிருக்கச் செய்யும்.

அதைத்தான் கணவன் பூமாலையை டிராக்டரில் ஏற்றிச் செல்லும்போது நிகழ்த்தியிருப்பாள் யசோதா. அதுமட்டுமல்ல, ஊர்ப்புறங்களில் முன்பு சீட்டாட்டங்கள் போல் சில இடங்களில் ஆண்கள், இளைஞர்களை வேலைக்குக் கூட செல்லாமல் உதவாகரைகளாக்கி இருக்கும் அமெச்சூர் கிரிக்கெட் ஆட்டங்களை கண்டிப்பதுபோல் பிட்ச்சை டிராக்டரில் உழுது செல்வாள் யசோதா. பாதிக்கப்பட்ட பெண்களின் கோபம் எல்லாமே புராண கால கண்ணகி தீயை விட வீரியமானது.

‘லப்பர் பந்து’ ஆரம்பத்தில் ஈகோ (Ego) vs அன்பு (Love) மோதல் கதை போலவே நமக்குப் பதிவாகும். ஆனால், அது பல்வேறு கோணங்களிலும் பாய்வதை படம் போகிற போக்கில் அன்பு - கெத்து கதாபாத்திரங்களின் மோதல் ஒருபக்கம் என்றால், அவர்களை வசப்படுத்தும் யசோதா, துர்காவின் எமோஷனல் ஸ்ட்ரெந்த் மறுபுறம் என மைதானத்தில் பவுண்டரிக்கள், சிக்ஸர்கள் பாயும்போது ஏற்படும் மகிழ்ச்சியைப் போல் நம்மை ஆர்ப்பரிக்க வைக்கும்.

யசோதா 12-ம் வகுப்பு படிக்கும்போது தான் காதலித்த பூமாலையோடு வீட்டை விட்டு வெளியேறி அவனைத் திருமணம் செய்து கொண்டிருப்பாள். அவர்கள் செய்துகொண்டது காதல் திருமணம் மட்டுமல்ல, சாதி மறுப்புத் திருமணமும் கூட. மாட்டிறைச்சி விற்பனை செய்யும் குடும்பப் பின்னணி கொண்ட யசோதா, பூமாலை வீட்டில் மாடு வளர்த்துக் கொண்டிருப்பாள். அவளுக்கும் அந்த மாட்டுக்கும் இடையே ஒரு பாசப் பிணைப்பு இருப்பது ஆங்காங்கே காட்சிகளில் நமக்கு நிறுவப்பட்டிருக்கும்.

சாதி எதிர்ப்புப் படங்களைப் போல் அத்தனை காத்திரமான, வலி மிகுந்த காட்சிகளால் இல்லாவிட்டாலும், அதைவிட அழுத்தமாகவே சாதி பற்றி படமெங்கும் பேசியிருக்கிறார் இயக்குநர். அதில் ஒன்றுதான் யசோதாவின் பெயரும், அவள் குடும்பப் பின்னணியும், அவளுடைய தற்போதைய நிலையும்.

யசோதாவுக்கு தன் கணவன் பூமாலைக்கு (கெத்து) அவனது வேலையைவிட கிரிக்கெட் மீதிருக்கும் மோகம் மட்டும்தான் பிரச்சினை. மற்றபடி பூமாலை பொறுக்கியோ, குடிகாரனோ இல்லை என்பதால் அவனுடைய ‘குவிக்’ காதல் பார்வைகளை ரசித்தபடி, காற்றில் பறந்துவரும் முத்தங்களை சுவாசித்தபடி அவனுடன் வாழ்கிறாள்.

பூமாலைக்கு காதல் போதையோடு கிரிக்கெட் போதையும் இருப்பதாலேயே, துபாய்க்கு சென்றும்கூட தாக்குப் பிடிக்காமல் ஊருக்கே திரும்பிவிடுகிறான். சீட்டாட்டம், ஆடுபுலி ஆட்டம், ஆன்லைன் ரம்மி, அமெச்சூர் கிரிக்கெட் என எல்லாவிதமான மயக்கங்களும் சமூகத்தின் ஏழை, கீழ்த்தட்டு, நடுத்தர வர்க்கக் குடும்ப ஆண்களைத்தான் அதிகம் அடிமைப்படுத்தி வைத்திருக்கின்றன. அப்படியான சமூக அவலம் பதம் பார்க்கப்பட்டிருந்தாலும் கூட பொருளாதாரப் போராட்டங்களுக்கு மத்தியிலும் தனது மகளை நர்சிங் வரை படிக்கவைத்திருக்கிறாள் யசோதா.

‘நீ தேடிக் கொண்ட வாழ்க்கை’ என்று யசோதாவை அவளது உற்றாரும் ஊராரும் வசைபாடிக் கொண்டே இருப்பதாலேயே, தன் வாழ்க்கைபோல் அல்லாமல் மகளின் வாழ்க்கை ஏற்றம் காணட்டும் என்று அவளுக்கு கல்வியை உறுதி செய்கிறாள்.

கல்வி, வேலை, பொருளாதாரச் சுதந்திரம் ஆகியவற்றைத் தவிர பெண்ணை வல்லமையாக்க வேறெந்த விண்ணுலக ஆசிர்வாதங்களும் தேவையில்லை. இந்த மூன்றும் இருந்தாலே பெண் தனது வாழ்க்கையை தான் விரும்பும்படி மாற்றிக் கொள்ளும் மாயக்கோலை பெற்றவளாகிவிடுவாள்.

மகள் துர்காவுக்கு அந்த மாயக்கோளை கொடுக்கவே யசோதா விரும்பியிருப்பாள். அதேபோல், யசோதா தன் மகளின் காதலைப் புரிந்துகொண்டு அதனை ஏற்றுக்கொள்ளும் பக்குவம், சில நேரங்களில் மெத்தப் படித்தவர்களிடம் கூட காண்பது அரிது.

மகள் காதலில் உள்ளாள் என்பதை குறிப்பாள் மட்டுமே உணர்ந்திருப்பாள். அதைப் பற்றி அவளிடம் ஆலோசித்திருக்கக் கூட மாட்டாள். மேலும், மாப்பிள்ளை வீட்டாரின் சாதியை மாமியார் கேட்கும்போது குறுக்கிட்டு, “மன்னிச்சிடுங்க... நானும், துர்கா அப்பாவும் அதெல்லாம் பார்க்க மாட்டோம்” என்று சொல்வது அத்தனைப் பாங்கு.

யசோதாவின் ரிஃபைண்ட், என்ஹேன்ஸ்டு வெர்ஷனாக துர்காவைக் கொள்ளலாம். துர்கா முதன்முதலில் அன்புவை பார்க்கும்போது தொடங்கி, அவனைக் கரம் பிடிக்கும் நாள் வரை ஒருவித நிதானத்தைக் கடைப்பிடிப்பாள். அவளுடைய அணுகுமுறைகள் எல்லாமே முதிர்ச்சியின் வெளிப்பாடுகள்.

“நீ காதல் சொல்வாய் என ஏங்கினேன்...” என்று பிற்போக்குவாத ஹீரோயின்கள் ஏக்கக் கவிதை கொண்ட பாடல்களைப் பாடியதற்கு நேரெதிராக ‘ஒருவனைப் பிடித்திருக்கிறது, அவனைப் பற்றி நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்’ என்று அவன் போன் நம்பரைப் பெற்று, அவனுக்கு டெக்ஸ்ட் செய்வது தொடங்கி, “எனக்கு இது வேணும், அது வேணும்னு எப்பவும் நான் கேட்க மாட்டேன்” எனச் சொல்வது வரையிலும் தான் ஒரு ‘இன்டிபென்டென்ட் வுமன்’ என்பதை உணர்த்துவாள்.

யசோதா கல்வியில் சிறக்காவிட்டாலும் கூட குடும்பத்தை நடுத்துவதில் கறாரானவள்தான். கெத்து கிரிக்கெட் பித்தத்தில் இருந்து தெளிய, அவனிடம் அதிரடி காட்டுவாள். சாமி, சத்தியம் என்று மிரட்டிப் பார்ப்பாள். மகள் திருமணம் வரையிலாவது விட்டேத்தி ஆட்டங்களை விடுக்கக் கோரியும் அதைச் செய்யாமல் இருக்கும்போதுதான் அவனை விட்டுப் பிரிவாள்.

அதேபோல், மகள் துர்காவின் காதலை ஏற்றுக் கொண்டாலும்கூட அவளுடைய காதலனும் தன் கணவனைப் போலவே பெண் பார்ப்பதைத் தவிர்த்துவிட்டு கூட, தாய்க்கு மருத்துவமனைக்கு துணைக்கு வருவதை தவிர்த்துவிட்டு கூட கிரிக்கெட் விளையாடுபவன் என்பதால் திருமணத்துக்கு ‘நோ’ சொல்வாள் யசோதா. அதன்பின்னர், கெத்து - அன்பு மோதல் அடுத்தக்கட்டத்தை எட்டி, அது அடிதடியாக உருவாகும்போது கணவனை விட்டுச் சென்று ஷாக் கொடுப்பாள்.

அதேவேளையில், தன் தந்தையை அடித்த காதலனுக்கு ஓங்கி அறைவிட்டுப் பிரிவாள் துர்கா. அம்மாவின் அதட்டலுக்குக் கட்டுப்பட்டு அன்று கெத்து டிராக்டரில் ஏறியது போலவே அம்மாவுடன் துர்கா ஸ்கூட்டரில் செல்லும் காட்சி ஒப்பீட்டுப் பகுப்பாய்வு செய்யத் தகுதியானது.

படத்தின் பாணியிலேயே சொல்ல வேண்டுமானால் யசோதாவும் துர்காவும் காட்டும் கெத்துதான் படத்தின் மீதிக் கதை. ‘கெத்து’ என்பதற்கு இங்கே ‘சுயமரியாதை’ எனப் பொருள் கொள்ளலாம்.

அன்பினால் இரு ஆண்களை நிரப்பியவர்கள், தங்களின் கெத்தால் அவர்கள் செய்வது தவறு என்பதைப் புரியவைத்து அவர்களை வென்றெடுப்பார்கள்.

எதற்காகவும் தங்களை சமரசம் செய்யாதிருப்பதுதான் பெண்ணியம்.

இதை மிக நேர்த்தியாக செய்திருப்பார்கள் யசோதாவும் துர்காவும்.

கணவனைப் பிரிந்து தாய் வீட்டுக்குச் சென்ற யசோதா கண்ணீரும் கம்பலையுமாக எல்லாம் இருக்க மாட்டாள். தான் கொடுத்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளாது கணவன் பாடம் கற்றுக் கொள்ளட்டும் என்றே தன் தாய் வீட்டு இறைச்சித் தொழிலில் தன்னை எந்தச் சலனமும் இல்லாமல் ஈடுபடுத்திக் கொள்வாள்,

மகள் துர்காவும் அப்படித்தான் தன்னைப் பார்க்க வரும் அன்பை புறக்கணிப்பாள். அவளுடைய புறக்கணிப்பு, தான் செய்த தவறை அன்புவுக்கு புரியவைக்கும். “நான் இல்லாமல் நீ இருந்திடுவியோன்னு பயமா இருக்கு” என்பான்.

உறவுச் சிக்கல்கள் ஏற்படும்போது ஒரு சின்ன பிரிவு, ஒருவர் இன்னொருவர் தரப்பு நியாயத்தைப் புரிந்துகொள்ள உதவும். அதுபோல, ‘நீயில்லாமல் நானில்லை’ என்ற மெல்டிங் பாயின்ட் ஸ்டேட்மென்ட்களை விட, ‘நான் இல்லாவிட்டால் உன்னால் இருக்க முடிகிறதா என்று பார்’ என்ற ஃப்ரீஸிங் பாயின்ட் பிஹேவியர்தான் பலன் தரும்.

அதைத்தான் துர்கா செய்திருப்பாள். அன்புவும் வழிக்கு வருவான். அதன் பின்னர் துர்கா கொடுத்த வாய்ப்பை நழுவ விடக் கூடாது என்ற மெனக்கிடலோடு எப்படியாவது மாமனாரை தாஜா செய்துவிட அவன் எடுக்கும் முயற்சிகள் காமெடி முதல் சின்சியர் ரகம் வரை நீளும்.

போட்டிப் போட்டுக் கொண்டு யசோதாவும் துர்காவும் தன்னவன் மீது காட்டும் அன்பும், அவர்களை வழிக்குக் கொண்டுவர காட்டும் கெத்தும் லப்பர் பந்தில் சென்ஞ்சுரி நாட் அவுட் ரகம்.

யசோதாவைவிட துர்கா எங்கே விஞ்சி நிற்பாள் என்றால், என்னவன் அவனுக்குப் பிடித்ததைச் செய்தாலும் எனக்குத்தான் முன்னுரிமை கொடுப்பான் என்பதை நிரூபித்துக் காட்டுவதில்!

சமீப காலத்தில் ‘லப்பர் பந்து’ படம் போல் பெண்ணியமும், சுயமரியாதையும் இலகுவாகப் பேசிய படங்கள் எதுவும் தமிழில் இல்லை என்றே சொல்லலாம்.

அண்மையில் வெளியான ‘தாய்க் கிழவி’ என்னைப் பொருத்தவரை சூடோ ஃபெமினிஸ படைப்பு. தனக்குப் பிடித்ததை யாருக்கும், குறிப்பாக தன்னைச் சார்ந்த ஆண் வட்டத்துக்குத் தெரியாமல் செய்யும் ‘தாய்க் கிழவி’ எங்கே... நினைத்ததை நினைத்தது போல் நேர்த்தியாக கெத்தாக செய்யும் யசோதா, துர்கா எங்கே!

தான் சார்ந்த சமூகத்திலேயே மகளுக்கு மறுமணம் அமைத்த ‘தாய்க் கிழவி’யை விட, மாமியார் சாதி பற்றிப் பேசியதற்கே மன்னிப்பு கோரிய யசோதா உயர்ந்தவளே!

ஊதாரி மருமகனை விரட்டி விட்டு மகளுக்கு அறுத்துக் கட்டுவேன் என்ற தாய்க் கிழவி, ஊதாரி மகன்களுக்கு அதையே செய்யத் துணிவாளா?!

“நான் விளையாடக் கூடாதுன்னு வெங்கடேஷ் சொல்றது சாதி திமிருன்னா, அகிலா விளையாடக் கூடாதுன்னு நீ சொல்றது என்ன ஆம்பள திமிரா?” என்று ‘லப்பர் பந்து’ படத்தின் ஒரு காட்சியில் அன்பு கேட்பான்.

சாதியை உடைப்பதும், ஆண் ஈகோவை உடைப்பதும் அத்தனை லாவகமாக, அதேவேளையில் அத்தனை சுளீரென்று இருக்க வேண்டுமே தவிர, அதைப் பூசி மெழுகிச் சொல்வது ‘அரசியலில் மையமாக இருக்கிறேன்’ என்பது போன்றதே.

அரசியலில் மட்டுமல்ல, சாதி ஒழிப்பிலும் லெல்ஃப்ட், ரைட் என்பதுபோல் ‘நான் சாதியை அங்கீகரிக்கிறேன்’, ‘அதை மறுக்கிறேன்’ என்று மட்டுமே இருக்க முடியும். பொதுவானது எல்லாமே ‘ஆம்’ என்பதுதான். அதை கருப்பு ஒரு கட்டத்தில், “அன்பு உனக்கு தம்பி ‘மாதிரி’தான்... வெங்கடேஷ் உனக்கு தம்பி” என்று சொல்லும்போது புரிந்துகொள்வான்.

எனவே யசோதா, துர்கா போல் சாதியைத் துறப்பதிலும், அன்பு செலுத்துவதிலும், சுயமரியாதையுடன் கெத்து காட்டுவதிலும் ஸ்டெடியாக இருக்கக் கடவீர்.

| தேவதைகள் இன்னும் வலம் வருவர்... |

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

Lubber Pandhu: யசோதா, துர்கா காட்டும் ‘கெத்து’ம் அன்பும் | திரை தேவதைகள் 16
Bulbbul: பலீவனப்படுத்தும் சமூகத்தைப் பந்தாடும் புல்புல் | திரை தேவதைகள் 15

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in