Published : 17 May 2023 07:04 PM
Last Updated : 17 May 2023 07:04 PM

“ரஷ்மிகா மந்தனாவின்‌ உழைப்பை ஒருபோதும்‌ குறை கூறவில்லை” - ஐஸ்வர்யா ராஜேஷ் விளக்கம்

‘புஷ்பா’ படத்தின் ராஷ்மிகா மந்தனாவின் கதாபாத்திரத்தை ஒப்பிட்டு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நேர்காணல் ஒன்றில் பேசியிருந்த நிலையில், “எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்பட்டுவிட்டது” என கூறி அவர் அறிக்கை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான்‌ திரைத்துறைக்கு வந்ததிலிருந்து நீங்கள்‌ என்‌ மீது பொழிந்து வரும்‌ நிபந்தனையற்ற அன்புக்கும்‌, எனது அனைத்து படங்களுக்கும்‌ நீங்கள்‌ அளித்து வரும்‌ பேராதவிற்கும்‌, முதலில்‌ உங்கள்‌ அனைவருக்கும்‌ நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்‌. என்‌ மீதும்‌, என்‌ பணியின்‌ மீதும்‌ அன்பைத்‌ தவிர வேறு எதுவும்‌ செலுத்த தெரியாத அற்புதமான ரசிகர்களையும்‌, அழகான பார்வையாளர்களையும்‌ பெற்றிருப்பதை நான்‌ பெரும்‌ பாக்கியமாக கருதுகிறேன்‌.

அண்மையில்‌ ஒரு நேர்காணலின்போது என்னிடம்‌, தெலுங்கு திரையுலகில்‌ நான்‌ எந்த மாதிரியான வேடங்களில்‌ நடிக்க விரும்புகிறேன்‌?” என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளிக்கையில்‌, “எனக்கு தெலுங்கு திரையுலகம்‌ மிகவும்‌ பிடிக்கும்‌, எனக்கு விருப்பமான கதாபாத்திரங்கள்‌ கிடைத்தால்‌ நிச்சயமாக தெலுங்கு படங்களில்‌ நடிப்பேன்‌, உதாரணத்திற்கு புஷ்பாவில்‌ வரும்‌ ஸ்ரீ‌வள்ளி கதாபாத்திரம்‌ எனக்கு மிகவும்‌ பிடிக்கும்‌” என பதிலளித்தேன்‌.

இருப்பினும்‌ துரதிர்ஷ்டவசமாக என்னுடைய பதில்‌ தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. ‘புஷ்பா’ படத்தில்‌ நடித்த நடிகை ரஷ்மிகா மந்தனாவின்‌ கடின உழைப்பை நான்‌ ஒரு போதும்‌ குறை கூறவில்லை. இதனால்‌ ஏற்பட்ட குழப்பத்தை நீக்குவதற்காக இந்த விளக்கத்தை அளிக்கிறேன்‌. ரஷ்மிகா மந்தானாவின்‌ பணி மீது எனக்கு ஆழ்ந்த அபிமானம்‌ மட்டுமே உண்டு என்பதையும்‌, திரையுலகைச்‌ சார்ந்த சக நடிகர்‌ நடிகைகள்‌ மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு என்பதையும்‌ தெளிவுபடுத்த விரும்புகிறேன்‌. என்னிடம்‌ கேட்கப்பட்ட கேள்விக்கு, நான்‌ உதாரணமாக கூறிய பதில்‌ தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x