Published : 06 Feb 2023 06:24 PM
Last Updated : 06 Feb 2023 06:24 PM

“அப்டேட் கேட்காதீர்கள்... அழுத்தம் தாங்கவில்லை...” - ரசிகர்களிடம் ஜூனியர் என்டிஆர் மன்றாடல்

‘‘அப்டேட் கேட்காதீர்கள்; எங்கள் மனைவிகளிடம் சொல்வதற்கு முன் உங்களிடம் தான் முதலில் தகவல் சொல்வோம்’ என நடிகர் ஜூனியர் என்டிஆர் ஆதங்கத்துடன் ரசிகர்களிடம் மன்றாடி பேசினார்.

தெலுங்கு திரைப்பட விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ஜூனியர் என்டிஆர், “நான் ஒரு சிறிய வேண்டுகோளை உங்களிடம் முன் வைக்கிறேன். நாங்கள் ஒரு படத்தை உருவாக்கும்போது உண்மையில் அதைப்பற்றி எதையும் சொல்ல முடியாது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணிநேரமும் அப்டேட் கொடுத்துக்கொண்டிருப்பது மிகவும் கடினம். உங்களின் ஆர்வம் எங்களுக்குப் புரிகிறது. ஆனால், அது சில சமயங்களில் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு அதீத அழுத்தத்தை கொடுத்துவிடுகிறது.

உங்கள் ஆர்வத்திற்காக அப்படி உடனே வெளிப்படுத்திவிட முடியாது. அப்படி எதாவது ஒன்றை வெளியிட்டாலும் உங்களுக்கு (ரசிகர்கள்) பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அவர்களை ட்ரோல் செய்து விடுவீர்கள். நான் மட்டுமல்ல, மற்றவர்களும் இந்த அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள்” என்றார்.

மேலும், “அப்படி ஏதேனும் அப்டேட் இருந்தால், அதை எங்கள் மனைவிகளிடம் சொல்வதற்கு முன்பு உங்களிடம் தான் முதலில் தெரிவிப்போம். ஏனென்றால் நீங்கள் எங்களுக்கு மிக முக்கியமானவர்கள். நான் எனக்காக மட்டும் பேசவில்லை. மற்ற நடிகர்களுக்காகவும் சேர்த்து தான் பேசுகிறேன். உறுதியான அப்டேட் இருந்தால் கண்டிப்பாக உங்களுக்கு கொடுப்போம். எங்கிருந்தோ சில செய்திகளைப் படித்து தயாரிப்பாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்” என்றார்.

பேசிமுடித்துவிட்டு அப்டேட்டை கொடுத்தவர், “என்டிஆர் 30 படம் இம்மாதம் தொடங்கும்; படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க உள்ளோம் என்பதை சொல்லிக்கொள்கிறேன். ஏப்ரல் 5, 2024 அன்று படம் வெளியாகும்” என்றார்.

ஜூனியர் என்டிஆர் அடுத்ததாக தெலுங்கு இயக்குநர் கொரட்டலா சிவாவுடன் கைக்கோக்கிறார். ‘என்டிஆர்30’ என அழைக்கப்படும் இந்தப்படத்திற்கான அப்டேட்டுகளை ரசிகர்களை கேட்டுக்கொண்டிருந்ததால் அவர் ஆதங்கத்துடன் இதனை நிகழ்ச்சி மேடையில் பதிவு செய்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x