Published : 28 Sep 2022 06:23 PM
Last Updated : 28 Sep 2022 06:23 PM

ரஜினி நடிக்க விரும்பிய பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்ததில் பெருமை: சரத்குமார்

'பொன்னியின் செல்வன்' நாவலில் வரும் பெரிய பழுவேட்டையராக ரஜினி நடிக்க விரும்பிய கதாபாத்திரத்தில் நான் நடிப்பது பெருமையாக உள்ளது' என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கத்தில் இரண்டு நாட்களில் திரைக்கு வர உள்ளது 'பொன்னியின் செல்வன் 1' திரைப்படம். இந்தப் படம் குறித்து நடிகர் சரத்குமார் பேசுகையில், ''பலரால் நீண்ட காலமாக திரைப்படமாக எடுக்க முயற்சி செய்யப்பட்ட பொன்னியின் செல்வனை, பல கஷ்டத்திற்கு பிறகு மணிரத்னமும், லைகா புரொடக்‌ஷனும் இணைந்து உருவாக்கியுள்ளனர். பல பெரிய நடிகர்களை ஒருங்கிணைத்து இந்தப் படத்தை மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கியுள்ளார்கள். முழு நாவலையும், கதாபாத்திரங்களையும் எடுக்க நினைத்தால் அது பல பாகங்களாக போகும். மணிரத்னம் அதை சரியாக சுருக்கி, ஒரு சிறப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரம் பெரிய வீரன், சோழ நாட்டிற்கு கட்டுபட்டவன், நந்தினியின் மனம் புரியாத கணவன் என்ற பல அம்சங்கள் நிறைந்து இருக்கிறது. இந்த படத்திற்கு என்னை தேர்ந்தெடுத்தற்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். மணிரத்னம் உடன் இணைந்தது பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. அவருடைய எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறோம் என்று நினைக்கிறேன். வரலாற்றில் பொன்னியின் செல்வன் கதாபாத்திரங்களில், எங்களின் வழி இனிமேல் பார்ப்பீர்கள் என்று நம்புகிறேன்.

சோழர்கள் பற்றி தெரியாமல் இருந்தவர்களுக்கு கூட, இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர்களை பற்றி தெரியவரும். சோழர்களுடைய பெருமைகளும், திறமைகளும் பல மக்களுக்கு புரியவரும். இனிவரும் காலங்களில் சோழர்களை பற்றி தெரிந்து கொள்ளும் சூழலை இந்தத் திரைப்படம் ஏற்படுத்தும். இந்தியாவில் தாஜ்மகாலை பார்க்க வரும் மக்கள், இனி தஞ்சை பெரிய கோயிலையும் வந்து பார்க்க வேண்டும்.

பழுவேட்டரையர் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர். பொன்னியின் செல்வன் கதையை படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அந்த வாய்ப்பை எனக்கு அளித்த டைரக்டர் மணிரத்னத்துக்கு நன்றி. அந்த வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று தெரியாது. ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக கருதுகிறேன், அவர் நடித்திருந்தால் அந்த பாத்திரத்தை நன்றாகவே செய்திருப்பார். தற்போது 21 படங்களுக்கு மேல் நடித்து வருகிறேன். நாயகனாகவும், முதன்மை கதாபாத்திரமாகவும், வில்லனாகவும் பல பாத்திரங்களில் நடித்து வருகிறேன்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x