Published : 12 Jul 2022 12:06 AM
Last Updated : 12 Jul 2022 12:06 AM

“சினிமாவுக்காகவே வாழ்வேன், சினிமாவே எனது உயிர்” - 'கோப்ரா' பட விழாவில் நடிகர் விக்ரம் உருக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விக்ரம். இயக்குநர் பாலாவின் 'சேது' தொடங்கி பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவு ஏற்பட மருத்துவமனையில் ஒருநாள் சிகிச்சை பெற்றார். இதையடுத்து அவர் உடல்நலம் தொடர்பாக வதந்திகள் பரவின.

இந்த வதந்திகள் குறித்து இன்று விக்ரம் நீண்ட விளக்கம் அளித்தார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள 'கோப்ரா' திரைப்படம் விரைவில் திரைக்க வரவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் பேசிய விக்ரம் தனது உடல்நலம் குறித்த வதந்திகள் தொடர்பாகவும் பேசினார். அதில், "எவ்வளவோ பாத்துவிட்டோம். இதெல்லாம் ஒண்ணுமில்லை என்பதால் வதந்திகள் பற்றி கவலைப்படவில்லை. எனது குடும்பம், எனது ரசிகர்கள் எனக்கு ஆதரவாக இருக்கும் வரை எனக்கு எதுவும் ஆகாது. 20 வயது இருக்கும்போது எனக்கு விபத்து ஏற்பட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்போது எனது காலை இழக்க வேண்டிய தருணம் வந்தது. ஆனால் அதில் இருந்தும் நான் மீண்டு வந்தேன். எனவே அதை பார்க்கும்போது இதெல்லாம் ஒன்றுமே கிடையாது.

சிறிய அசௌகரியத்தால் மருத்துவமனை செல்ல நேர்ந்தது. ஆனால் அதனை இந்த அளவுக்கு கொண்டுசென்றுவிட்டார்கள். இதனால் என்னை நேசிக்கும் சிலர் சங்கடங்களை சந்தித்தனர். அவர்கள் அனைவருக்காகவும், நான் நன்றாக இருக்கிறேன் என சொல்லவே இந்த மேடைக்கு வந்துள்ளேன்.

நான் எப்பவும் சினிமாவுக்காகவே வாழ்வேன். மற்றதை காட்டிலும் சினிமாவே எனது உயிர். பல ஆண்டுகளுக்கு முன் சோழா டீ விளம்பரத்தில் நடித்தேன். அன்று விளம்பர படத்துக்கு திலீப்குமார் என்பவர் இசையமைப்பாளராக இருந்தார். அன்று அந்த விளம்பரத்தில் சோழ ராஜனாக நடித்தேன். ஆனால், இன்று மிகப்பெரிய காவியமான பொன்னியின் செல்வன் படத்தில் எனது கனவு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஆதித்த கரிகால சோழனாக நடித்துவிட்டேன். இரண்டு ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். நமக்கு என்று ஒரு கனவு லட்சியம் இருந்தால், அதற்கேற்ற உழைப்பை கொடுத்தால் நாம் நினைப்பதை விட பெரிய இடத்தை அடைய முடியும். உழைத்தால் உயலாம் என்பது இதிலிருந்து தெரிகிறது. ரசிகர் அன்பும் ஆதரவும் நிறைய இருக்கிறது. ரசிகர்களை பற்றி நினைக்கும் போது வார்த்தைகள் வருவதில்லை. உயிர் உருகுதே என பாடுகிறேன்." என்று நெகிழ்வாக பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x