Published : 23 Feb 2022 04:24 PM
Last Updated : 23 Feb 2022 04:24 PM

மீண்டும் விளம்பரப் பணிகளுக்கு தயாராகும் ‘ஆர்ஆர்ஆர்’ படக்குழு 

‘ஆர்ஆர்ஆர்’ படத்துக்கான விளம்பரப் பணிகளுக்காக படக்குழு மீண்டும் தயாராகியுள்ளது.

ராஜமெளலி இயக்கத்தில் 'இரத்தம் ரணம் ரெளத்திரம்' (ஆர்ஆர்ஆர்) பொங்கல் பண்டிகை மற்றும் சங்கராந்தி பண்டிகை வெளியீடாக உலகெங்கும் வெளியாகவிருந்தது. 'பாகுபலி'க்குப் பிறகான ராஜமெளலியின் பிரமாண்ட படைப்பு என்பதாலும், ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் எனப் பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருப்பதாலும் ஒட்டுமொத்த இந்தியாவிலும் எதிர்பார்ப்புக்குரிய படமாக 'ஆர்ஆர்ஆர்' கவனம் ஈர்த்தது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் கடந்த ஜனவரி 7ஆம் தேதி அன்று வெளியாகவிருந்த நிலையில், புரமோஷன் பணிகளுக்காக இந்தியா முழுவதும் படக்குழு பயணம் செய்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது. ஆனால், அப்போது கரோனா பரவல் அதிகமாக இருந்ததால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வெளியீட்டுக்கு முன்பான விளம்பரப் பணிகளுக்காக மட்டுமே ரூ.18 முதல் 20 கோடிகள் வரை படக்குழு செலவழித்ததாக தகவல் வெளியாகின.

அதன் பிறகு கரோனா அச்சுறுத்தல் படிப்படியாக குறையத் தொடங்கியதும் ‘ஆர்ஆர்ஆர்’ படம் வரும் மார்ச் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் ஒரு மாதகாலமே உள்ள நிலையில் தற்போது மீண்டும் படத்தை தீவிரமாக விளம்பரப்படுத்த படக்குழு ஆயத்தமாகி வருகிறது.

இதன் முதற்கட்டமாக வரும் மார்ச் 1 அன்று துபாயில் நடைபெறும் ஒரு விளம்பர நிகழ்ச்சியில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x