Published : 08 Dec 2020 10:47 AM
Last Updated : 08 Dec 2020 10:47 AM

ட்விட்டரில் சாதனை நிகழ்த்திய 'மாஸ்டர்' செல்ஃபி

'மாஸ்டர்' படப்பிடிப்பின்போது விஜய் வெளியிட்ட செல்ஃபி 2020ஆம் ஆண்டில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்டது என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. இதன் படப்பிடிப்பு டெல்லி, சென்னை, நெய்வேலி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. நெய்வேலி படப்பிடிப்பின்போதுதான், விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடந்தது.

இதன் விசாரணைக்காக நெய்வேலி படப்பிடிப்பிலிருந்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டார் விஜய். இது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. வருமான வரி சோதனை முடிந்து, நெய்வேலியில் நடந்த 'மாஸ்டர்' படப்பிடிப்பில் கலந்துகொண்டார் விஜய்.

தினமும் மாலையில் விஜய்யைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடும். வருமான வரி சோதனைக்குப் பிறகு, விஜய்யைப் பார்க்க அதிக அளவில் கூட்டம் கூடியது. அப்போது படப்பிடிப்புத் தளத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தின் மீது ஏறி ரசிகர்கள் கூட்டத்துடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் விஜய்.

இந்த செல்ஃபி விஜய் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் பகிரப்பட்டது. பின்னர், அது பெரும் வைரலானது. ரசிகர்கள் பகிர்ந்தது மட்டுமன்றி, பிரபலங்கள் பலரும் பகிர்ந்தார்கள். இந்த செல்ஃபிதான் ட்விட்டர் தளத்தில் இந்திய அளவில் அதிகம் பேரால் ரீ-ட்வீட் செய்யப்பட்டது என்று கடந்த சில தினங்களுக்கு முன்பாக அறிவிக்கப்பட்டது. இதனை விஜய் ரசிகர்கள் #INDIAsMostRTedVIJAYSelfie என்ற ஹேஷ்டேகில் ட்விட்டர் தளத்தில் கொண்டாடி வந்தனர்.

இந்நிலையில் மேற்குறிப்பிட்ட செல்ஃபி 2020ஆம் ஆண்டிலேயே அதிகம் ரீட்வீட் செய்யப்பட்டது என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்திலும் ட்விட்டர் நிறுவனம் பதிவிட்டுள்ளது. தற்போது வரை இந்த செஃல்பி ட்வீட் 1 லட்சத்துக்கு 58 ஆயிரத்துக்கும் அதிகமான முறை ரீட்வீட் செய்யப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் #VIJAYRuledTwitter2020 என்ற ஹேஷ்டேகில் கொண்டாடி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x