Published : 07 Dec 2020 07:08 PM
Last Updated : 07 Dec 2020 07:08 PM

நமது மண்ணின் போர் வீரர்கள்: விவசாயிகளின் போராட்டத்துக்கு ப்ரீத்தி ஜிந்தா ஆதரவு

டெல்லி

நமது மண்ணின் போர் வீரர்கள் எனக் குறிப்பிட்டு விவசாயிகளின் போராட்டத்துக்கு ப்ரீத்தி ஜிந்தா ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார்.

மத்திய அரசு கடந்த செப்டம்பரில் 3 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்தச் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு 12-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு 5 சுற்றுப் பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை.

குறைந்தபட்ச ஆதரவு விலை திட்டம் தொடரவும், சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்யவும் மத்திய அரசு முன்வந்த போதிலும், வேளாண் சட்டங்களை முழுமையாக நீக்கும்வரை போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

விவசாயிகளின் போராட்டத்துக்கு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சியினர் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்தித் திரையுலகின் முன்னணி நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

"இந்தக் குளிரிலும், தொற்றுக்கு நடுவிலும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் எனது அன்பு. நமது தேசத்தை இயங்கவைத்துக் கொண்டிருக்கும் நமது மண்ணின் போர் வீரர்கள் அவர்கள். அரசுக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை விரைவில் நல்ல முடிவை எட்டி பிரச்சினை தீர்க்கப்படும் என்று நம்புகிறேன்".

இவ்வாறு ப்ரீத்தி ஜிந்தா தெரிவித்துள்ளார்.

— Preity G Zinta (@realpreityzinta) December 6, 2020

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x