Published : 15 Apr 2020 10:10 PM
Last Updated : 15 Apr 2020 10:10 PM

மணிரத்னத்தைப் பார்த்த சந்தோஷத்தில் அழுத குஷ்புவின் மகள்

நேரலை கலந்துரையாடலில் மணிரத்னத்தைப் பார்த்த சந்தோஷத்தில் குஷ்புவின் மகள் அனந்திகா அழுதார்.

மனைவி சுஹாசினியின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குநர் மணிரத்னம் ரசிகர்களுடன் நேற்று கலந்துரையாடினார். முதன்முறையாக மணிரத்னம் சமூக வலைதளத்தில் கலந்துரையாடுவதால் பலரும் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தார்கள்.

இந்தக் கலந்துரையாடல் சுமார் 1 மணிநேரம் வரை நீடித்தது. அனைத்துக் கேள்விகளுக்கும் ரொம்பவே நிதானமாகவும், சந்தோஷமாகவும் மணிரத்னம் பதிலளித்தார். இது அவருடைய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இந்த நேரலை கலந்துரையாடல் நிகழ்வில் ரசிகர் ஒருவர், "நடிக்கும் ஆசை வந்திருக்கிறதா? உங்கள் நண்பர்கள் யாரும் நடிக்கக் கேட்டதில்லையா?" என்று ஒரு ரசிகர் கேட்க, அதற்கு பதில் சொல்வதற்குள் குஷ்பு நேரலையில் வந்தார். அவரிடம் இந்தக் கேள்வியை சுஹாசினி சொல்ல, அதற்கு குஷ்பு, "வேண்டாம், நடிக்காதீர்கள். நடிக்காதீர்கள்" என்று அலற, உடனே மணிரத்னம், "பார்த்தீர்களா, நீங்கள் இப்படி அதிர்ச்சி ஆக வேண்டாம் என்றுதான் நான் நடிக்கவில்லை" என்றார்.

அதற்கு குஷ்பு, "இல்லை, ஏற்கெனவே உங்கள் படங்களைப் பார்த்து எங்களுக்குத் தூக்கம் வருவதில்லை. நீங்கள் நடிக்கவும் ஆரம்பித்தால் அவ்வளவுதான்" என்று உணர்ச்சிவசப்பட்டுப் பேச மணிரத்னம் அதையே நையாண்டியாக மாற்றி, இதனால்தான் நடிக்கவில்லை என்று மறுபடியும் சிரித்துக் கொண்டே சொன்னார்.

மேலும், குஷ்பு, "நான் சுஹாசினியிடம் என்ன பேசியிருக்கிறேன் என்று கேளுங்கள். உங்களைப் பார்த்தால் ஆச்சரியத்தில், பதற்றத்தில் பேச்சே வராது. வாயைப் பிளந்து பார்ப்போம்" என்று சொன்னார். தொடர்ந்து தனது இளைய மகள் அனந்திகாவை மணிரத்னத்திடம் அறிமுகம் செய்ய அவர் மணிரத்னத்தைப் பார்த்த சந்தோஷத்தில் அழ ஆரம்பித்தார்.

"நான் உங்களை என்ன செய்தேன், ஏன் அழுகிறீர்கள்" என்று மணிரத்னம் நகைச்சுவையாகக் கேட்க, அதற்கு அனந்திதா, "நான் உங்கள் மிகப்பெரிய ரசிகை. நான் உங்கள் 'ரோஜா', 'தளபதி', 'மௌன ராகம்' ஆகிய படங்களைப் பார்த்துக் கொண்டே இருப்பேன். நேற்று கூட பார்த்தேன்" என்றார்.

சுஹாசினி, மணிரத்னத்திடம், "ஒரு பெண்ணை அழ வைத்துவிட்டீர்கள், என்ன செய்து சரிகட்டப் போகிறீர்கள்" என்று கேட்டார். அதற்கு மணிரத்னம் "நான் தனியாக அவரிடம் பேசுகிறேன்" என்றார். இதனைத் தொடர்ந்து குஷ்பு, "தலைமுறைகளைத் தாண்டி எப்படி எல்லோரையும் ஈர்க்கிறீர்கள்?" என்ற கேள்வியை மணிரத்னத்திடம் எழுப்பினார்.

அதற்கு மணிரத்னம், "அது மாயாஜாலம், அந்த ரகசியத்தை எப்படி வெளியே சொல்ல முடியும்? அதைப்பற்றிச் சொல்லக்கூடாது" என்று பதில் அளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x