Published : 15 Apr 2020 05:56 PM
Last Updated : 15 Apr 2020 05:56 PM

நீங்கள் உறவுகளை எப்படி நுணுக்கமாகச் சித்தரிக்கிறீர்கள்? மாதவனின் கேள்விக்கு மணிரத்னம் பதில்

தனது நேரலையில் மாதவன் எழுப்பிய பல கேள்விகளுக்கு இயக்குநர் மணிரத்னம் பதிலளித்தார்.

கரோனா ஊரடங்கு அமலில் இருக்கும் இந்தச் சமயத்தில் முதன்முறையாக தனது ரசிகர்களுடன் நேரலையாக கலந்துரையாடினார் இயக்குநர் மணிரத்னம். சுஹாசினியின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த நேரலை நடைபெற்றது.

நேற்று (ஏப்ரல் 14) நடந்த இந்த நேரலையில் ரசிகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்து வரும்போது இடையே மாதவன், குஷ்பு, அதிதி ராவ் உள்ளிட்ட பிரபலங்களும் மணிரத்னத்திடம் கேள்விகள் எழுப்பினர். அதற்கும் அவர் பதிலளித்தார்.

மாதவன் எழுப்பிய கேள்விகளும், மணிரத்னத்தின் பதில்களும் இதோ:

நீங்கள் வெளியில் சென்று பலருடன் கலந்து பேசாத ஆள். தனியாகப் பயணம் மேற்கொள்ளாத ஆள். ஆனால் உங்கள் படங்களில் உறவுகளை அவ்வளவு நுணுக்கமாகச் சித்தரிக்கிறீர்கள். அது எப்படிச் சாத்தியமாகிறது? அந்த அனுபவங்களை எப்படிப் பெறுகிறீர்கள்?

உங்களால் ஒரு விஷயத்தைப் பார்க்க முடிந்து, அது ஒரு குறிப்பிட்ட காலத்தைத் தாண்டியும் பொருந்தும் என்று தோன்றினால், இது இந்தக் காலத்தில் நடக்கக்கூடிய விஷயம் என்பது புரிந்தால், அதைத் திரையில் பிரதிபலிக்கவும் தெரிய வேண்டும் என நினைக்கிறேன். நாமே சென்று எல்லாவற்றையும் அனுபவப்பட வேண்டும் என்று அவசியமில்லை. நாம் வளர்கையில் தானாகத் தெரிந்து கொள்ளும் விஷயம்தான். அடிப்படை சிந்தனையில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. 2020-ல் நடப்பது உங்கள் இளமைக் காலத்திலும் உங்கள் மனதில் தோன்றியிருக்கலாம்.

வேலு நாயக்கருக்கும், அவரது மக்களுக்கும் இருக்கும் உறவைக் காட்டும்போது அது நிஜமாக இருக்கிறது. நீங்கள் அப்படிப்பட்ட ஒரு நபருடன் சென்று நேரம் செலவழிக்கவில்லை. 'ஓகே கண்மணி', 'செக்கச் சிவந்த வானம்' படங்களில் உறவுகளைக் காட்டும்போதும் அவை மிக யதார்த்தமாகத் தெரிகிறது. எப்படி?

நம்மால் முடிந்த வரை நாம் கவனிக்க வேண்டும், புரிந்து ள்ள வேண்டும். அனுபவம் பெற வேண்டும். சில சமயங்களில் அந்த உணர்வின் தன்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் அதில் இருக்கும் உண்மை தெரியவரும்.

'நாயகன்' படம் எடுக்கும்போது என்னுடன் இருந்த உதவி இயக்குநர் ஒருவர் (வரதராஜ) முதலியாரின் குழுவிலிருந்தவர். அவர் எப்போதும் வெள்ளை உடை தான் அணிவார். முதலில் எனக்கு அவர் யாரென்று தெரியாது. ஆனால் எங்கள் அதிர்ஷ்டம் அவர் படம் முடியும் வரை எங்களுடன் இருந்தார். முதலியார் சோஃபா இருந்தாலும் தரையில்தான் உட்காருவார் என்பதை அவரிடமிருந்து தெரிந்து கொண்டோம். ஒரு நபரைப் பற்றிய இந்த ஒரு விஷயத்தை வைத்து அந்தக் கதாபாத்திரத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதைத் திரையில் இன்னமும் விரிவாக்க முடியும். எனவே அப்படி ஒரு தன்மையைத் தெரிந்து கொண்டால் அந்தக் கதாபாத்திரத்தைப் படைக்கலாம்.

நீங்கள் எழுதிய பல வசனங்கள் பிரபலமானவை. இன்றும் நிலைத்திருப்பவை. ஆனால் அவை எல்லாமே ஒரு வரி. 'அலைபாயுதே' படத்தில், "நீ அழகா இருக்கனு நினைக்கல... " காதல் வசனத்தைப் பேச வைத்தீர்கள். ஆனால் நான் ஆறு வரிகள் பேசினேன். ஆனால் நீங்கள் மிகவும் யதார்த்தமான இயக்குநர். இந்த வசனத்தைக் கேட்டு அதிகபட்சமாக இருக்கிறதே என்று நீங்கள் முகம் சுளிக்கவில்லையா?

அந்தக் காட்சியில் ஒரே நேரத்தில் இரண்டு ரயில்கள் இருந்தன. என் கவலையெல்லாம் அதைப் பற்றித்தான் இருந்தது. அவை நிற்க வேண்டும். நீ சரியாக ஒரே டேக்கில் சொன்னால் போதும் என்று இருந்தது. எத்தனை வரிகள் என்பது பற்றியெல்லாம் யோசிக்கவில்லை.

அந்த வரிகள் அவ்வளவு பிரபலமாகும் என்று தான் நினைக்கவில்லை என்றும், ஆனால் அதனுடன் அடையாளப்படுத்தப்படுவதில் மிக்க மகிழ்ச்சி, நன்றி என்று மாதவன் கூறினார். அதற்கு மணிரத்னம், நல்லது, அவை உனக்காக எழுதப்பட்டவை மேடி என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x