Published : 08 Apr 2020 02:15 PM
Last Updated : 08 Apr 2020 02:15 PM

பெப்சிக்கு எவ்வளவு நிதியுதவி கிடைத்தது; எப்படிப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது?- ஆர்.கே.செல்வமணி விளக்கம்

பெப்சி தொழிலாளர்களுக்கு எவ்வளவு நிதியுதவி கிடைத்துள்ளது, எப்படிப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்ற விவரத்தை ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தலால் இந்தியா முழுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், எந்தவொரு படத்தின் படப்பிடிப்பும் நடைபெறவில்லை. இந்தக் காரணத்தால் தினசரி தொழிலாளர்கள் பலரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். அவர்களுக்கு உதவ வேண்டும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ரஜினி, அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்ட பலரும் நிதியுதவி அளித்தனர். சிலர் அரிசி மூட்டைகளாகவும் உதவி செய்துள்ளனர். தற்போது இந்த உதவிகள் தொடர்பாக இன்று (ஏப்ரல் 8) பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.

இதில் எவ்வளவு நிதியுதவி வந்தது, எப்படிப் பிரித்துக் கொடுக்கிறோம் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தார்.

இந்தச் சந்திப்பில் ஆர்.கே.செல்மவணி பேசியதாவது:

"நிதியுதவி கோரி திரையுலகைச் சேர்ந்த அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதற்கு 2 கோடி 45 லட்ச ரூபாய் நிதியாக உதவி செய்துள்ளனர். 2400 அரிசி மூட்டைகள் உதவியாகக் கிடைத்துள்ளன. 25 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொரு சங்கத்துக்கும் 100 பேரை வரவழைத்து சமூக இடைவெளி விட்டு உதவிகள் செய்து வருகிறோம். இதுவரைக்கும் 15 ஆயிரம் பேருக்கு உதவி செய்திருக்கிறோம். இன்னும் 10 ஆயிரம் பேருக்குத் தேவைப்படுகிறது. ஒரு நபருக்கு 25 கிலோ அரிசியும், 500 ரூபாய் மளிகைப் பொருட்கள் வாங்குவதற்கும் அளித்து வருகிறோம்.

25 ஆயிரம் பேருக்கும் கொடுப்பதற்கு 3.75 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. 2 கோடி 45 லட்ச ரூபாயை வைத்து முதலில் கொடுத்து வருகிறோம். இதர நடிகர்கள், தயாரிப்பாளர்கள் உதவி செய்வதை வைத்து இதை முடிக்கவுள்ளோம். அனைத்து உறுப்பினர்களுக்குமே இந்த உதவியைச் செய்வதாகக் கூறியுள்ளோம். அதை நிச்சயமாக இன்னும் 2 - 3 நாட்களுக்குள் முடித்துவிடுவோம்.

ரஜினி, அஜித், சிவகுமார் குடும்பத்தினர், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி எனத் தொடங்கி உதவி செய்த அனைவருக்கும் நன்றி. நிதியுதவி அளித்தவர்களில் திரையுலகைச் சேர்ந்த ஒருவர் தனது பெயரை வெளியே சொல்லக்கூடாது என்ற நிபந்தனையுடன் 25 லட்ச ரூபாய் நன்கொடை அளித்துள்ளார். பசிப் பிணியைப் போக்கிய அனைவருக்கும் நன்றி. இது சாதாரண விஷயமல்ல. இந்தப் புண்ணியம் அனைத்துமே உங்களுக்கும், உங்கள் குடும்பத்துக்கும்தான்.

உயர்ந்த நிலையில் இருக்கும் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்குமே வேராக இருப்பது திரைப்படத் தொழிலாளர்கள்தான். இந்த வேருக்கு இப்போது தண்ணீர் ஊற்ற வேண்டும். இன்னும் 9 ஆயிரம் பேருக்கு உதவிகள் தேவை. அனைத்துத் திரையுலகினருமே உதவ வேண்டும். எவ்வளவு பணம் என்பது முக்கியமில்லை, மனம் தான் முக்கியம். உதவிகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறோம்.

அதேபோல் நாங்கள் யாரையும் நேரடியாக அணுகவில்லை. உதவிகள் கேட்டு வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டோம். அதேபோல் தனிப்பட்ட முறையில் அனைவருக்கும் கடிதம் அனுப்பினோம்".

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x