Published : 08 Apr 2020 01:19 PM
Last Updated : 08 Apr 2020 01:19 PM

யூடியூப் நேரலையில் அசத்திய அனிருத்: இரண்டை மணிநேர இசைக் கச்சேரி

இசையமைப்பாளர் அனிருத் கிட்டத்தட்ட இரண்டை மணிநேரம், யூடியூப் லைவில் தனது ரசிகர்கள் கேட்ட பாடல்களைப் பாடி அசத்தியுள்ளார்.

வழக்கமான இசைக் கச்சேரியில் விசில் சத்தங்களும், கூச்சல்களும் இருக்கும். செவ்வாய்க்கிழமை (நேற்று) மாலை யூடியூபில் வெளியான லைவ் ஸ்ட்ரீமிங்கில் நூற்றுக்கணக்கான கருத்துகள் வந்தன. ஒவ்வொரு நொடியும் எதிரொலித்த இக்கருத்துகள் அனிருத்தை திக்குமுக்காடச் செய்தன. ஆரம்பிக்கும்போது, தன்னிடம் சிறிய கீபோர்ட் தான் தற்போது இருக்கிறது. அதனால் எல்லாப் பாடல்களையும் பாட முடியாது என்று தொடங்கினார் அனிருத். 'வை திஸ் கொலவெறி'யுடன் ஆரம்பித்தார்.

தொடர்ந்த எண்ணற்ற பாடல் கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன. '3' படத்தில் ஆரம்பித்து 'ஆலுமா டோலுமா', 'மரண மாஸ்', 'ஓ பெண்ணே', 'குட்டி ஸ்டோரி' என சமீபத்திய 'மாஸ்டர்' வரை நிறைய பாடல்களை அனிருத் பாடினார். முன்பே எதையும் யோசித்து வைக்காமல் ரசிகர்களின் கோரிக்கைக்கு ஏற்ப அப்போதைக்கு அப்போதே பாடினார்.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், 'கத்தி' படத்தில் வரும் 'ஆத்தி என நீ' பாடல் அவரது குரலில் இருக்கும் ஈர்ப்பைக் காட்டியது. 'வாத்தி கமிங்' பாடல் மூலம் தனது கீபோர்ட் வாசிக்கும் திறனைக் காட்டினார். தனது தெலுங்கு மொழிப் பாடல்களின் ரசிகர்களுக்காக 'அக்ஞாதவாசி', 'ஜெர்சி' ஆகிய படங்களிலிருந்தும் தேர்ந்தெடுத்துப் பாடினார்.

"இதுபோன்ற கடினமான சூழலில் உங்களுக்குப் பொழுதுபோக்கு தருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறிய அனிருத், அனைவரையும் வீட்டிலேயே பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தினார்.

சில வரிகள் மறந்து போனார், சில இடங்களில் சுருதி பிசகியது, ஆனால் அந்த இரண்டரை மணிநேரமும் அனிருத் தனது இசை மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கு, அவர்கள் வீட்டிலேயே உற்சாகம் தந்தார் என்பதை மறுக்க முடியாது.

- ஸ்ரீனிவாச ராமானுஜம் (தி இந்து ஆங்கிலம்); தமிழில்: கார்த்திக் கிருஷ்ணா

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x