Published : 08 Apr 2020 08:41 AM
Last Updated : 08 Apr 2020 08:41 AM

கரோனா சிகிச்சைக்காக ராகவேந்திரா மண்டபத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் - ரஜினி அனுமதி

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் சிகிச்சைக்காக ராகவேந்திரா திருமண மண்டபத்தை அரசு பயன்படுத்திக் கொள்ள நடிகர் ரஜினிகாந்த் அனுமதியளித்துள்ளார்

தமிழகத்தில் கரோனா தொற்றைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக அரசு. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் தனியாக வார்டு தயார் செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை தமிழகத்தில் கரோனா தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை 621 ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனைகளைத் தாண்டி பல்வேறு அரசியல் பிரபலங்கள், திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய திருமண மண்டபங்கள், கல்லூரி வளாகங்களை கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

தனது திருமண மண்டபத்தை கரோனா சிகிச்சைக்காக எடுத்துக் கொள்ளலாம் என்று கவிப்பேரரசு வைரமுத்து முதல்வர் பழனிசாமிக்கு நேற்று (07.04.20) கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனது ராகவேந்திரா திருமண மண்டபத்தை நடிகர் ரஜினிகாந்த் கரோனா சிகிசைக்காக அரசு விரும்பினால் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரஜினிகாந்த் தரப்பில் கேட்டபோது, ‘‘கடந்த 2015ஆம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது 20 நாட்களுக்கும் மேலாக மக்களின் நலனுக்காக அனுமதிக்கப்பட்ட இடம் அது. அதேபோல, இப்போதும் ராகவேந்திரா திருமண மண்டபத்தை மக்களின் நலனுக்காக கொடுக்கத் தயாராகவே இருக்கிறோம். தமிழக அரசு விரும்பினால் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் சிகிச்சைக்காக ராகவேந்திரா திருமண மண்டபத்தை தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம்’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x