Published : 11 Mar 2020 03:36 PM
Last Updated : 11 Mar 2020 03:36 PM

சினிமா மேடைகள் கிடைக்குமா என ஏங்கியது உண்டு: சிவகார்த்திகேயன்

தொலைக்காட்சியில் இருக்கும்போது சினிமா மேடைகள் கிடைக்குமா என ஏங்கியது உண்டு என்று 'பிளான் பண்ணி பண்ணனும்' இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் பேசினார்.

பத்ரி இயக்கத்தில் ரியோ, ரம்யா நம்பீசன், ரோபோ ஷங்கர், தங்கதுரை, விஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று (மார்ச் 11) நடைபெற்றது.

இதில் படக்குழுவினருடன் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த விழாவில் சிவகார்த்திகேயன் பேசியதாவது:

''பத்ரி சாருடைய 'பாணா காத்தாடி' படமும், பாடல்களும் ரொம்பவே பிடிக்கும். அவரும் யுவன் சாரும் கூட்டணி என்றாலே அதுவொரு தனி ஃபீல். அவர் இதுவரை செய்த படங்களை விட, இந்தப் படம் பெரிய வெற்றி பெற வேண்டும். முழுமையான காமெடி படமாக செய்திருக்கிறார்.

ரியோ மீது நம்பிக்கை வைத்த படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. இந்த மேடையில் இருக்கும் அனைவருமே தொலைக்காட்சி, சினிமா இரண்டிலுமே பணிபுரிந்தவர்கள். ஏனென்றால் தொலைக்காட்சியில் இருக்கும்போது சினிமா மேடைகள் கிடைக்குமா என ஏங்கியது உண்டு. தொலைக்காட்சியில் இருந்தவர்கள் அனைவருமே இந்த மேடையில் இருப்பது கூடுதல் சந்தோஷம். எங்களுக்கு ஏக்கங்கள் நிறைய உண்டு. அதெல்லாம் இந்த மேடையில் பார்ப்பதால் கூடுதல் சந்தோஷம் தருகிறது.

'அயலான்' படத்தில் பாலசரவணனுடன் பணிபுரிந்தேன். ஒரு மலை மீது படப்பிடிப்பு. அங்கிருந்து ஓட முடியாததால் அவருடன் 10 நாட்கள் பணிபுரிய வேண்டிய சூழல். அவர் பேசுவது அனைத்துமே சுவாரசியமாக இருக்கும். படப்பிடிப்புத் தளத்தில் சரியாக 1:30 மணிக்கு அவ்வளவு ஆர்வமாக இருப்பார். மதிய இடைவேளை விட்டவுடனே, இதைச் சாப்பிடலாமா, அதைச் சாப்பிடலாமா என்று கேட்பார். அவரோடு சேர்ந்துதான் நிறைய சாப்பிடக் கற்றுக் கொண்டேன். நடுவில் நானும் அவரை மாதிரி குண்டாக இருந்தேன். அதற்கு அவர் தான் முக்கியக் காரணம். மதுரை வட்டார மொழி ரொம்பவே பிடிக்கும். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

ரோபோ ஷங்கர் அண்ணன் பற்றிப் பேச நிறைய இருக்கிறது. எப்போதுமே ஜாலியாக இருப்பார். தங்கதுரையின் ஜோக்குகளால் தற்கொலைக்கு முயன்ற பலரில் நானும் ஒருவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை. இதெல்லாம் ஜோக்கா என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது, அதையே ட்ரெண்டாக்கிவிட்டார்.

நான் யுவன் சாருடைய பெரிய ரசிகர். ரம்யா நம்பீசன் படம் பண்ணுகிறார், பாடல்கள் பாடுகிறார் என்பதைத் தாண்டி அவர் இயக்கிய குறும்படம் பார்த்தேன். அது அதிகமான தாக்கத்தைக் கொடுத்தது. அந்தக் குறும்படம் பார்க்கும் போது யாரிடம் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பயங்கரமான படைப்பு வரும் என உணர்ந்தேன். கூடிய சீக்கிரம் ரம்யா நம்பீசனை இயக்குநராகவும் எதிர்பார்க்கிறோம்.

ரியோவுக்கு இந்தப் படமும் வெற்றி பெறும். உங்களுடைய எந்த விழாவிலும் நான் இருப்பேன். ஏனென்றால் உங்கள் மீது எனக்கு ஸ்பெஷல் கேர் உண்டு. நான், டிடி, ரியோ மூவருமே பிப்ரவரி 17-ம் தேதி பிறந்தவர்கள். அனைவருமே என் நண்பர்கள் என்பதால், இதை என் படமாகத்தான் பார்க்கிறேன். கண்டிப்பாக ஹிட்டாகும்.

சினிமா என்பது இப்போது மக்களிடம் கிடைக்கும் வார்த்தைகள் மூலமாகப் பெரிய வெற்றி பெறுகிறது. விளம்பரங்களைத் தாண்டி அது ரொம்பவே அதிகரித்துவிட்டது என நம்புகிறேன். 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படம் இன்று மக்கள் மத்தியில் பெரிய வெற்றி பெற்றுள்ளது. அதே போல் இதுவும் பெரிய ஹிட்டாகும் என நம்புகிறேன்”.

இவ்வாறு சிவகார்த்திகேயன் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x