Published : 02 Oct 2019 02:03 PM
Last Updated : 02 Oct 2019 02:03 PM

'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியீடு எப்போது?- கெளதம் மேனன் பதில்

'எனை நோக்கி பாயும் தோட்டா' எப்போது வெளியாகும் என்று கேள்வி எழுப்பிய மாணவருக்கு கெளதம் மேனன் பதிலளித்துள்ளார்.

கெளதம் மேனன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’. மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், சசிகுமார், வேல. ராமமூர்த்தி, சுனைனா, செந்தில் வீராசாமி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராணா டகுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

தர்புகா சிவா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி, வரவேற்பைப் பெற்றுள்ளன. கெளதம் மேனனின் ஒன்றாக என்டெர்டெயின்மென்ட் மற்றும் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருக்கும் இந்தப் படம் பைனான்ஸ் சிக்கலால் வெளியாகாமல் உள்ளது. பல முறை வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. ஆனால், செப்டம்பர் 6-ம் தேதி கண்டிப்பாக வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. இறுதியில், அந்தத் தேதியிலும் வெளியிட முடியாமல் போனது.

இந்நிலையில் சென்னையில் தனியார் கல்லூரி விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார் கெளதம் மேனன். அப்போது மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தார். அதில், ”'எனை நோக்கி பாயும் தோட்டா' எப்போது வெளியீடு" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு கெளதம் மேனன், "நவம்பர் 15-ம் தேதி கண்டிப்பாக வெளியாகும். அதில் மாற்றமில்லை" என்று பதிலளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x