Published : 07 May 2019 01:32 PM
Last Updated : 07 May 2019 01:32 PM
சிம்பு நடிப்பில் வெளியான ‘தொட்டி ஜெயா’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது.
சிம்பு நடிப்பில் 2005-ம் ஆண்டு வெளியான படம் ‘தொட்டி ஜெயா’. வி.இஸட்.துரை இயக்கிய இந்தப் படத்தில், ஹீரோயினாக கோபிகா நடித்தார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, ஒரு பாடலுக்கு மட்டும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார்.
கேங்க்ஸ்டர் த்ரில்லர் படமான இதன் இரண்டாம் பாகம், சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு உருவாக இருக்கிறது. இரண்டாம் பாகத்துக்கான ஆரம்பகட்ட வேலைகளில் தற்போது ஈடுபட்டுள்ளார் வி.இஸட்.துரை.
சிம்பு தற்போது ‘மாநாடு’ படத்தில் நடிக்கவுள்ளார். வெங்கட்பிரபு இயக்கும் இதன் படப்பிடிப்பு, இந்த (மே) மாதம் தொடங்க இருக்கிறது. இந்தப் படத்துக்காக வெளிநாட்டில் இரண்டு மாதங்கள் தங்கியிருந்து உடல் எடையைக் குறைத்ததோடு, தற்காப்புக் கலைகளையும் கற்றுள்ளார் சிம்பு.
சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சிம்பு ஜோடியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடிக்கிறார்.
இதைத் தொடர்ந்து, கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ‘முஃப்தி’ தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் சிம்பு. அவருடன் இணைந்து கெளதம் கார்த்திக்கும் இந்தப் படத்தில் நடிக்கிறார். கன்னடத்தில் இயக்கிய நரதனே தமிழிலும் இயக்குகிறார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.
இந்த இரண்டு படங்களையும் முடித்தபிறகு ‘தொட்டி ஜெயா 2’ படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது. இதற்கிடையே ஹன்சிகா நடிப்பில் உருவாகும் ‘மஹா’ படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறார் சிம்பு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT